குருவைத் தேடி -1
வாழ்க்கையைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொல்லி வைத்திருக்கின்றனர். ஏன், நம் ஒவ்வொருவருக்குமே இந்த வாழ்க்கையைப்பற்றி ஒவ்வொருவிதமான கருத்து இருக்கின்றது. இந்த வகையில் ஓர் இந்து தன் வாழ்க்கையை ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கின்றான். ஏனெனில் சனாதன தர்ம நெறிகளை அறிந்து வாழ்கின்ற ஓர் இந்துவிற்குத் தான், வாழ்க்கை என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? நான் என்பது உண்மையில் எதைக் குறிக்கின்றது? போன்ற புதிர்களை எல்லாம் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த விதத்தில் வேத நெறிகளின் அடிப்படையில் நமது சனாதன தர்ம வாழ்க்கை முறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நமது சனாதன தர்ம வாழ்க்கை ரிஷி பரம்பரையால் உருவாக்கப்பட்டது. இறைவனால் உபதேசிக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய உண்மைத் தத்துவங்களை தமது தவ வாழ்க்கை முறையினால் உய்த்துணர்ந்த அந்த முனிவர்கள் அவற்றை வேதங்களாக உருவாக்கி வெளிப்படுத்தினர். அந்த உண்மைகள் பரம்பரை, பரம்பரையாகக் கர்ண பரம்பரையாக வளர்ந்து தர்ம நெறிகளாக வடிவெடுத்தன.
ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது. தான் யார்? தனது உண்மைத் தன்மை என்ன? போன்ற எதுவும் தெரியாத நிலையில், அறியாமையுடன், காலம் கொண்டு செல்கின்ற விதத்தில், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற ஓர் இந்து, தான் நம்புகின்ற பூர்வஜென்மப் புண்ணிய வசத்தினால் தன் குருவைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு இறையருளால் தான் நிகழ்கின்றது. குருவும் தானுமாக சந்திக்கின்ற அந்த நிகழ்வு அவனுக்கு வாழ்க்கையின் திருப்பமாக அமைகின்றது. இறைவனே தன் விருப்பத்தால் குருவாக அவதரித்துத் தன் படைப்பாகிய மனிதனைத் தன்னிடத்தில் சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றான். இது ஒன்றும் ஒரு சாதாரணமான செயல் அல்ல. ஒரு பூ மலர்வதைப் போல், ஒரு விதை முளைவிடுவதைப் போல், ஒரு குழந்தை பூமியில் ஜனிப்பதைப்போல் அற்புதமான ஓர் இணைவு இது.
இவ்வகையில் யாராயிருந்தாலும் ஒருவனுக்குக் குரு மிக மிக அவசியமாகின்றார். பிற மதத்தினரை விட ஓர் இந்துவிற்குத்தான் இந்தத் தேடல் எளிதில் வாய்க்கின்றது. குரு கிடைப்பதும் அவனது வாழ்க்கைப் போக்கில் தான் சுலபமாக அமைகின்றது. ஏனெனில் அவனது வாழ்க்கையே அந்தப் போக்கில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.
குருவின் பெருமை சொல்வதற்கு அரியது. தன்னைத் தனக்கு யார் என்று உணரச் செய்கின்ற உன்னதப் பணியினைத் தன்னலம் கருதாது கருத்துடன் செய்பவர் குரு. இத்தகைய குரு பரம்பரையின் காரணமாகத்தான் பாரத தேசம் இன்றளவும் பொன்னொளிர் பாரதமாக உலகப் பார்வையில் உயர்ந்தோங்கித் திகழ்கின்றது. இந்தியத் திருநாட்டினை உய்விப்பதற்காக இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மகான் அங்கு அவதரி;த்துக்கொண்டே இருக்கிறார் என்று சொல்கின்றனர்.
நாம் இதுவரை எத்தனையோ மகான்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்திருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்களுக்குத் தத்தாத்ரேயர் என்னும் அவதார புருஷரைப் பற்றி அறிவதற்கு வாய்ப்பில்லை. மகாராட்டிர மாநிலத்தின் தான் தத்தாத்ரேயர் வழிபாடு மிக அதிகம். கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் உள்ள மக்கள் கூட தத்தாத்ரேயர் பற்றி நன்கு அறிந்து அவரை வழிபட்டுப் பலனை அடைந்திருக்கின்றனர். எனக்கும் கூட அவரைப்பற்றி ஓரளவிற்குத் தான் முன்பு தெரியும். அனுசுயா தேவிக்கும், அத்திரி முனிவருக்கும் அவர்களின் வேண்டுதலின் பலனாக அவதரித்த ஞானப் புதல்வர் அவர் என்பது தெரியும். ஆனால் அவரே மீண்டும் மீண்டும் அவதரித்துப் பற்பல அதிசயங்கள் புரிந்த வரலாறு பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரிய வந்தது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கோவில் திருநகரமாகிய கும்பகோணத்தில் வாழ்ந்த எனது சகோதரி திருமதி. இந்திரா சுவாமிநாதனின் வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அவர் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அருள் பெற்றவர். சிறந்த பக்தை. நினைத்தபோதெல்லாம் இனிய ராகங்களோடு சேஷாத்ரி சுவாமிகளின் சிறப்புகளைப் புதிய புதிய பாடல்களாக இயற்றிப் பாடவும், அருள்வாக்கு வழங்கக்கூடியவராகவும் திகழ்ந்த அவர், அந்த ஊரில் குருபக்தி கொண்டவர்களின் பிரியத்திற்கு உரியவராக வாழ்ந்து வந்தார். அவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோதுதான் இந்த குரு சரித்திரம் என்னும் அரியதான பழைய புத்தகத்தை எடுத்துப் படிக்க நேர்ந்தது. அதை என் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் மராட்டிய மொழியின் தமிழ் மொழிபெயர்ப்பான அந்தப் புத்தகம் இரண்டு நுhற்றாண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கை முறையைக் கதைகளாகத் தன்னகத்தே கொண்டிருந்தது.
அப்புத்தகத்தில் கையாளப்பட்டிருந்த மொழிநடை, அதில் சொல்லப்பட்டிருந்த வரலாறுகள், மக்களின் எளிய வாழ்க்கை முறை, ஆன்மீக மனப்போக்கு, குருபக்தியின் ஆழம், அவர்கள் நம்பிய மகான் செய்து காட்டிய அற்புதங்களின் உண்மை எல்லாமே வித்யாசமாக விளக்கப்பட்டிருந்தன. பல முறை அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு தான் இதனை ஏன் மீண்டும் ஒரு முறை இப்போதுள்ள நடைமுறைத் தமிழில், அதன் பழமை கெடாத விதத்தில், அதன் துhய்மை மாறிவிடாத தன்மையில் எழுதப் பட்டுள்ளது.