Date
: 13 JANUARY 2018
Time uploaded in London- 5-51 am
Written by S NAGARAJAN
Post No. 4611
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஜோதிட இதழான ஸ்ரீ ஜோஸியம் பத்திரிகை ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
காரிய வெற்றிக்கு சகுனங்கள்!
ச.நாகராஜன்
நமது முன்னோர்கள் இயற்கைப் படைப்பைக் கூர்ந்து கவனித்து ஒரு காரியம் கை கூடுமா, தொடங்கும் பணியில் வெற்றி உண்டா இல்லையா என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்க சகுன பலனைச் சொல்லி உள்ளனர்.
இராமாயணத்தில் சீதைக்கு ஏற்படும் நல்ல சகுனங்கள், மஹா பாரதத்தில் துரியோதனனுக்கு ஏற்படும் தீய சகுனங்கள் ஆகியவற்றைப் படிக்கும் போது வியப்பு ஏற்படும்.
அப்படி சகுன பலன்களை விவரமாக விவரித்துள்ளனர் முன்னோர்.
கிராமங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லி, கடைப்பிடிக்கப்படும் இந்த சகுனக் குறிகள் இன்றைய நகர வாழ்க்கையில் சில சமயம் பொருத்தமில்லாமல் போகிறது; அல்லது அதைத் தெரிந்து கொள்ளாமல் நகரங்களில் வாழ்வோர் காரியங்களைத் தொடங்குகின்றனர்.
சம்ஸ்கிருதத்தில் சகுனம் பற்றிப் பல நூல்கள் உண்டு. நூற்றுக்கணக்கான ஸ்லோகங்கள் உள்ளன.
தமிழிலும் பல நூல்கள் உண்டு. எடுத்துக் காட்டாக ஒரு நூலை மட்டும் இங்கு பார்க்கலாம்.
அம்பலவாணப் புலவர் எழுதிய அறப்பளீசுர சதகம் நூறு பாடல்களைக் கொண்ட அருமையான நூல்.
அதில் சகுனங்களைப் பற்றி மூன்று செய்யுள்கள் உள்ளன. (செய்யுள்கள் 62,63,64)
அவை வருமாறு:-
சொல்லரிய கருடன் வானரம் அரவம் மூஞ்சூறு குகரம் கீரி கலைமான்
துய்யபாரத்வாசம் அட்டை எலி புன் கூகை சொற்பெருக மருவும் ஆந்தை
வெல்லரிய கரடி காட்டான்பூனை புலி மேல் விளங்கும் இரு நா உடும்பு
மிகவுரை செய் இவையெலாம் வலம் இருந்திடமாகில் வெற்றியுண்டதிக நலம் ஆம்;
ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலை தாக்கல்
ஒருதுடையிருத்தல்,பற்றல்,
ஒரு தும்மல், ஆணையிடல், இருமல், போகேலென்ன
உபசுருதி சொல் இவையெலாம்
அல்லல் தரும் நல்ல அல என்பர்;முதியோர் பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரிவளர்
அறப்பளீசுரதேவனே!
பொருள்: பெரியோர்கள் வாழ்த்துகின்ற தூயவனே! மதவேள் தினமும் மனதில் வழிபடுகின்ற சதுரகிரியில் குடி கொண்டிருக்கும் அறப்பளீசுர தேவனே!
சொல்வதற்கு அரிய கருடனும், குரங்கும், பாம்பும், மூஞ்சூறும், பன்றியும், கீரியும், கலைமானும்,தூய கரிக்குருவியும், அட்டையும், எலியும், இழிந்த கோட்டானும், மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்ல முடியாத கரடியும், காட்டுப் பசுவும், பூனையும், புலியும், மேலாக விளங்கும் இரு நாக்குகளை உடைய உடும்பும் ஆகிய இவை எல்லாம் வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றி உண்டாகும். மிகுதியான நலமும் உண்டாகும்.
வழிப்பயணம் மேற்கொள்வோரின் தலையில் இடித்தல், ஒரு காலில் நிற்றல், வலது கையைப் பிடித்தல், ஒற்றைத் தும்மல், ஆணையிடுதல், இருமுதல், போக வேண்டாம் என்று காதில் விழும்படியாகக் கூறுதல் இவை யாவும் துன்பம் தரும். நல்லன அல்ல என்பர்.
நரிமயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை
நாவிசிச்சிலியோந்தி தான்
கரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி
நாடரிய சுரபி மறையோர்
வரியுழுவை முயலிவையனைத்தும் வலம் ஆயிடின்
வழிப்பயணம் ஆகை நன்றாம்;
மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்
வாய்ச்சொல் வா வா வென்றிடல்,
தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசி
தப்பட்டை ஒலி வல்வேட்டு
தனி மணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி
தனக்கேக நன்மை என்பர்!
அருணகிரனோதயத் தருணபானுவையனைய
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரி வளர்
அறப்பளீசுரதேவனே!
பொருள் : சிவந்த கதிர்களை உடைய ஞாயிறு போன்ற அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியுள்ள அறப்பளீசுர தேவனே!
நரியும், மயிலும், பச்சைக் கிளியும், கோழியும், கொக்கும், காக்கையும், கஸ்தூரி மிருகமும்., சிச்சிலிப் பறவையும், ஓணானும், வல்லூறும், விரைந்து கத்தும் செம்போத்தும், எருமையும் சிந்தித்தற்கு அரிதான பசுவும், அந்தணரும், வரிப்புலியும், முயலும் ஆகிய இவை யாவும் வலமாக வந்தால் வழிப் பயணம் நன்மை தரும். மேலும், குதிரை கனைத்தலும், வா வா என்று வாய்ச்சொல்லாக காதில் படும்படி கூறுதலும்,சங்கு ஒலித்தலும், கொம்பும்,கிடுமுடியும், முரசும், தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும், ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும் ஊரிலிருந்து பயணம் மேற்கொள்ள நல்லது என்று அறிஞர் கூறுவர்.
தலைவிரித்தெதிர் வருதல், ஒற்றைப் பிராமணன்,
தவசி, சந்நாசி, தட்டான்,
தன்மிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,
தட்டைமுடி, மொட்டைத்தலை,
கலன் கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,
கதித்த தைலம், இவைகள்
காணவெதிர் வரவொணா: நீர்க்குடம், எருக்கூடை,
கனி, புலால் உபய மறையோர்
நலம் மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை
நாளும் வண்ணான் அழுக்கு
நசை பெருகு பாற்கலசம், மணி, வளையல், மலர் இவைகள்
நாடி யெதிர் வர நன்மையாம்;
அலை கொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே!
பொருள்: அலை கொண்ட கங்கையை அணி ந்த சடையானே!
மழு ஏந்திய அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுர தேவனே!
தலைவிரி கோலமாக ஒருவர் எதிரில் வருதலும், ஒற்றைப் பிராமணனும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், தனம் இல்லாத மார்பினளும்,மூக்கில்லாதவனும், புல் தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், அணிகலன் இல்லாத பெண்களும்,குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும் ஆகிய இவைகள் கண் காண எதிரில் வருதல் தகாது.
நீர்க்குடமும், எருக்கூடையும்,பழமும், மாமிசமும், இரட்டை பிராம்மணரும்,நலம் மிகு சுமங்கலி, கிழங்கு, பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், ஆகிய இவைகள் தேடி எதிரே வந்தால் நலம் ஆகும்.
மேற்கூறிய சகுன பலன்கள் சரியா, இல்லையா?
இதை எப்படி சரி பார்ப்பது. மிகவும் சுலபம். சகுனத்தை தினமும் கவனித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டால் போதும், ஒரு சில வாரங்களில் நாம் நிபுணராகி விடுவோம்.
சோதனை செய்து அறிவதே ஆனந்தம். இதையே இயற்கையை அனுசரித்த முன்னோர் செய்தனர். சகுனத் தடை என்றால் சற்று நேரம் கழித்துக் காரியத்தைத் தொடங்கலாம்,இல்லையா!
முயன்று பார்ப்பதில் நஷ்டம் ஒன்றுமில்லை; லாபம் தான்!
முயல்வோம்; சரி பார்ப்போம்; கடைப் பிடிப்போம்