பாண்டவர்கள் வனவாசத்தின் போது லோமச முனிவரைச் சந்தித்தனர். அவர் புனித தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியம் பற்றி பாண்டவர்களிடம் எடுத்துரைத்தார்.
அப்போது காலஞானியான சகாதேவன் தன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான்.
“”முனிவர் பெருமானே! “”நீராடுவதால் உடல் தூய்மை பெறும். உள்ளத்திலும் புத்துணர்ச்சி உண்டாகும். இதுதவிர பெரிய நன்மை என்ன இருக்கிறது? ” என்றான். அவனது கேள்வி லோமச முனிவரைச் சற்று அதிர்வுக்கு ஆளாக்கியது.
“”சகாதேவா! புனித நீராடுவதன் மகிமை தெரியாமல் இருக்கிறாயே? பூதங்கள் ஐந்தில், நீருக்கே அனைத்திலும் வியாபிக்கும் தன்மை உண்டு. நெருப்பும் நீருள் அடங்கி விடும். ஆகாயவெளியில் காற்றைப் புணர்ந்து மேக வடிவில் திகழும். மண்ணோடு கலந்தாலும் தனது நிலையைத் துளியும் இழக்காது. உயிர்கள் அனைத்திற்கும் தண்ணீரே மூலம். உலகம் அழியும் காலத்தில் நீரில் தான் ஒடுங்கும். அவ்வாறு ஓடுங்கினால் தான், மீண்டும் உலகம் உண்டாகவே முடியும். இதன் காரணமாக பஞ்சபூதங்களில் தண்ணீரையே முதல் பூதம்’ என்பர்.
தண்ணீரின் நிலைகள் ஆறு. அதனாலேயே இதன் ஓட்ட கதியை “ஆறு’ என்று காரணப் பெயரால் சொல்கிறோம். கடல் நீரே நன்னீராகிறது. ஆவியாதல், மேகமாதல், குளிர்ந்து மழையாகுதல், பின் விழுதல், ஓடுதல், கடலில் சேர்தல் என்று ஆறுநிலைகள் ஒரு ஆற்றுக்குப் பின் இருப்பதை அறிவாயாக.
பூமியில் நான்கில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, நிலத்தை விட, நீருக்கே பூமியில் வலிமை அதிகம். இதன் காரணமாக மட்டுமின்றி, இதன் உயர் சிறப்பு கருதியே இதன் மேல் பள்ளி கொண்டிருக்கிறான் பரந்தாமன். இதை தன் சடை மேலேயே கங்கையாக கொண்டிருக்கிறான் ஈசன். நீரில் பூத்த கமலத்தையே தன் இருப்பிடமாக கொண்டுள்ளார் பிரம்மா. பராசக்தியோ பூலோகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நதியாக ஓடிக் கொண்டிருக்கிறாள். மூவரைக் கடந்து தோன்றிய மற்ற மூவர்களான கணபதி, கந்தன், சூரியன் போன்றோரும் நீருடன் பெரிதும் தொடர்பு கொண்டவர்கள்.
சரவணப் பொய்கை தான் கந்தனின் கர்ப்பத் தலம். பார்வதியின் ஸ்நானக் கட்டமே கணபதியின் கர்ப்பத்தலம். சூரியனால் பூவுலகில் மட்டுமே உயிர்கள் வாழ்கின்றன. – காரணம் கடல்நீர்!
நீரின் பெருமையை இதுபோல கூறிக் கொண்டே போகலாம். நமது உடம்பிலும் நீர்ச்சக்தியே அதிகம். அன்னமின்றி கூட ஒருவர் உயிர் வாழலாம். ஆனால், நீரின்றி வாழவே முடியாது. இதனாலேயே ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், தவசிகள், வேதியர்கள் என்று சகலருக்கும் நீராடுதல் முக்கியமாக இருக்கிறது.
நீரில் ஒருவர் மூழ்கும் போது, நீர் என்னும் பூதமாகவே ஆகி விடுகிறார். மற்ற நான்கு பூதங்களின் தொடர்பு அற்றுப் போகிறது. இதனால், மற்ற பூதங்களால் உண்டான கர்மாவர்தங்கள்(வினை) உடலைச் சுற்றி, அலைக் கற்றைகளாய் சூழ்ந்திருப்பதில் இருந்து விலக்கு ஏற்படுகிறது. நீருக்கு மட்டுமே உடல் அழுக்கு மட்டுமின்றி உள்ளம் சார்ந்த அழுக்குகளையும் போக்கும் தன்மை உண்டு. இதனாலேயே தர்ப்பணம், சிராத்தம் போன்றவை நீரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
நீரானது நேர்மறை, எதிர்மறை என்னும் இருவித விளைவுகளைத் தரும் தன்மை உடையது. அமைதியான எண்ணமுடன் நேர்மறை மந்திரங்களுடன் நீரைத் தீண்டும் போது அதன் மூலக்கூறுகள் நன்மையாக செயல்படும்.
எதிர்மறை எண்ணத்துடன் நீராடும் போது, மூலக்கூறுகள் தீயதாக செயல்படும். சத்தியம், பக்தி, நன்றியுணர்வோடு நீரை அணுகவேண்டும். அதை அழுக்காக்க கூட, அதன் அனுமதியை வணங்கிப் பெற வேண்டும். இதனாலேயே ஆறு, குளங்களில் நீராடும் முன், முதலில் காலை
நனைக்காமல், தலையில் தெளித்த பிறகு உள்ளே இறங்குவர்.
ஒருவருக்கு ஒரு பொருளை நீரின் பெயரால் அர்க்கியமாக அளிப்பதும் நீரின் சிறப்பினால் தான். “நீரின்றி அமையாது உலகு’ என்று நீரைப் போற்றினர் நம் சான்றோர்.
“”மகாமுனியே…. நீருக்கு பின்னால் இத்தனை விஷயங்களா… அடேயப்பா!” என்றான் தர்மன்.
“”ஒருவன் தண்ணீர், உப்பு கேட்கும் போது இல்லை என்று ஏன் சொல்லக்கூடாது என்பது இப்போது தான் புரிகிறது. வானம் அளித்த நீரை பூமி நமக்கு அளிக்கிறது. இதை நமக்கு மட்டுமே உரியது என்று நினைப்பது எவ்வளவு பேதமை?” என்றான் பீமன்.
“”ஆம் அண்ணா…. நீராலேயே பெருமை…. உழைத்து வியர்வை பெருகும் போது உடம்புக்குப் பெருமை! தாகத்தோடு நீர் அருந்தும் போது உணர்வுக்குப் பெருமை! மகாமுனி கூறியது போல, நீரில் மூழ்கும் போது நாமும் நீரின் ஒரு அணுவாக மாறுகிறோம். ஒவ்வொரு ஆறும் கடலோடு சங்கமிப்பதால், நமக்கும் கடல் சம்பந்தம் உருவாகி நாமும் பெரிதினும் பெரிதாகி விடுகிறோம்” – என்றான் நகுலன்.
இதையடுத்து பாண்டவர்கள் லோமசரிடம், தண்ணீரின் பெருமை பற்றி சொன்ன நீங்கள், மிகச்சிறந்த புண்ணிய தீர்த்தம் பற்றி சொல்லுங்களேன்…” என்றனர்.
உடனே லோமசர், “”உலகில் தலை சிறந்த தீர்த்தம் பிருகு தீர்த்தம். இதன் பின்புலத்தில், இருப்பவர் பரசுராமர்! ஜமதக்னி என்னும் மகாமுனிக்கும், ரேணுகா தேவி என்ற பத்தினிக்கும் பிறந்தவர். சிவனை துதித்து அவரிடமிருந்து பரசினை(கோடரி) பெற்றதால் பரசுராமர் எனப்பட்டார். இவருக்கே இந்த தீர்த்தம் தான் ஒரு கட்டத்தில் சக்தி அளித்தது.” என்றார் லோமசர்.
– தொடரும்
பரசுராமர் தன் சக்தியை இழந்ததையும், மீண்டும் அதைப் பெற்றதையும் பற்றி லோமசர் கூறத் தொடங்கினார்.
“”ரிசீக முனிவரின் புத்திரரான ஜமதக்னியின் புத்திரர் பரசுராமர். இவரது தாய் தான் ரேணுகா தேவி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
என்றொரு பழமொழி உண்டு தெரியுமா?” என்று லோமசர் கேட்க, தர்மன் புன்னகைத்தபடியே, “மகரிஷி…அப்படியே தாயும் உயர்ந்தவள் தானே,” என்றான்.
“”சரியாகச் சொன்னாய் தர்மா…! ஆனால், பரசுராமனைப் பற்றிக் கூறும் போது மட்டும் முதலில் தந்தையே உயர்ந்தவர் என்ற கருத்து நினைவுக்கு வரும். ஏனென்றால், தந்தையின் கட்டளை என்பதன் பொருட்டு தன் பரசு என்கிற கோடரியாலே தன் தாயான ரேணுகாதேவியை வெட்டி வீழ்த்தியவன் தான் பரசுராமன்,” என்று லோமச முனிவர் கூறவும் அனைவரிடமும் அதிர்வு…
“”மகரிஷி.. தந்தை பேச்சைக் கேட்டு தாயையே கொன்றாரா பரசுராமர்… இது என்ன கொடுமை?” என்று பீமன் ஆவேசமாகக் கேட்டான்.
“”அது ஒரு தனிக்கதை… அதற்குள் இப்போது நாம் செல்லத் தேவையில்லை. இங்கே நீங்கள் பரசுராமர் குறித்து தெரிந்து கொள்ள நிறைய நுட்பமான சங்கதிகள் உள்ளன. தன் சொல்லுக்காக மகன் தாயைக் கொன்றதை எண்ணி ஆச்சரியப்பட்ட ஜமதக்னி முனிவர்.
“”மகனே! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்,” என்றவுடன், “”என் தாய் உயிர் பெற்று எழ வேண்டும்” என்ற வரத்தையே கேட்டான். அவரும் அவ்வாறே செய்தார்.
பரசுராமர், இப்படி தாய், தந்தை இருவர் மீதும் அன்பு கொண்டிருந்தார். இவர் வசமுள்ள பரசு என்ற கோடரியை இவருக்கு தந்தவர் சிவபெருமான். கடும்தவம் செய்து அதன் பயனாகப் பெற்றதே “பரசு’. இதைப் பெற்ற பின், தனக்கு நிகரான வீரனோ அல்லது பெற்றோரை மதிப்பவனோ பூவுலகில் இல்லை என்று கருதினார். இப்படி கருதினாலே ஆபத்து தானே… இவருக்கு அயோத்தியை அரசாட்சி செய்த ராமன் பற்றி பிறகே தெரிய ஆரம்பித்தது.
“ராமபிரான் பற்றி நீங்கள் அறிவீர்கள் அல்லவா?” – என்று லோமசர் கேட்க, “அந்த விஷ்ணு அவதார மூர்த்தியை அறியாது இருப்போமா?” என்று திருப்பிக் கேட்டாள் திரவுபதி.
“நல்லது… அயோத்தி ராமனுக்கும், இந்த பரசுராமனுக்கும் ஒரு சமயம் யுத்தம் மூண்டது என்றால், உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாய் இருக்கும்” – லோமசர் இப்படி கூறவும் ஐவரும் வியப்புடன் பார்த்தனர்.
“என்ன பார்க்கிறீர்கள்?”
“பார்க்கிறோமா… திகைத்துப் போய் விட்டோம்…”
“எதனால்?”
“இரண்டு ராமர்களுமே மோதிக் கொண்டார்கள் என்கிறீர்களே.. எப்படி திகைப்பு நேராது போகும்…” “அங்கே தான் மனித மனங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனதைப் போல விசித்திரமான ஒன்று, இந்த உலகில் மட்டுமல்ல… புவனம் பதினான்கிலும் கூட கிடையாது…”
“எப்படி என்று சற்று விளக்கமாக கூறுங்களேன்…”
“”கூறுகிறேன்… பரசுராமருக்கு தன் வசமுள்ள பரசுவே மேலானது என்றும், தானே நிகரில்லாதவன் என்றும் செருக்கு ஏற்பட்டது என்றேன் அல்லவா?
“ஆமாம்”
“அங்கே தான் ஆரம்பமானது பிரச்னை..”
“தெய்வீக புருஷர்களுக்குமா செருக்கு?”
“நல்ல கேள்வி… சாமான்யர்களின் செருக்கு அவர்களையே அழித்து விடும். தெய்வீகர்களின் செருக்கு திருவிளையாடலாகி உலகிற்கு பாடமாகி விடும்”
“புரிகிறது…. ராமரும், பரசுராமரும் எங்கே எப்போது மோதிக் கொண்டனர்”
“அயோத்தி ராமரின் பெருமையைக் கேள்விப்பட்ட பரசுராமர், தன்னையும் விஞ்சும் அளவுக்கு ஒரு வீரனா என்ற எண்ணத்தில் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார். அயோத்தி புறப்பட்டார். ராமனும் அவரைப் பணிந்து வரவேற்றான். பரசுராமரோ அலட்சியத்துடன், தன் வசமிருந்த சிவதனுசுவை ராமனிடம் கொடுத்து, “”ராமா…. நீ சுத்த வீரன் என்றால், இந்த வில்லில் அம்பைப் பூட்டி நாணேற்று,” என்றார்.
“ஏன் இந்த சோதனை?” என்றார் ராமர்.
“உன்னைப் பற்றி நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா என்பதை அறிய வேண்டாமா?”
“நான் ஒதுங்கிக் கொள்கிறேன் பரசுராமரே”
“நீ என்னை மதிப்பது உண்மை என்றால், இந்த வில்லை எடுத்து நாணைப் பூட்டு. பிறகுபேசு….”
“நான் விளையாட்டுக்கு வேண்டுமானால், நாணேற்றிப் பார்க்கிறேன். ஒருவேளை இயலாது போனால் பரிகாசம் செய்யாதீர்கள்….”
“எனக்கும் அது தானே வேண்டும்…” – இப்படி வாக்கு வாதம் நடந்தது. ராமரும் நாணேற்ற ஆரம்பித்தார்.
அவரைக் கண்டு உலகமே நடுநடுங்கியது.
“பூமியிலும் பெரும் நடுக்கம். கடலிடமும் தடுமாற்றம். ராமர் நாணேற்றி முடித்ததும், பரசுராமர் தடுமாறிப் போனார். அப்படியே, விஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்த ராமரைக் கண்ட பரசுராமர், கைகளைக் கூப்பி கண்ணீர் பெருக தரிசித்தார்.
பின் அப்படியே பரசுராமர், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சந்நியாசி கோலம் ஏற்றார். தவறான நோக்கத்தில் தான் செய்த பாவம் நீங்க, ஓராண்டு வரை தவத்தில் ஆழ்ந்தார்.பின் பிருகு தீர்த்தத்தில் நீராடிய பின்னரே பாவம் விலகியது. முகப்பொலிவு, எண்ணத் தெளிவு, மன அமைதி மூன்றும் கிடைக்கப் பெற்றார். அன்று முதல் நீராடுவோர் அனைவருக்கும் இந்த நற்பலனை எல்லாம் இத்தீர்த்தம் வாரி வழங்குகிறது,” என்று முடித்தார் லோமச முனிவர்.
– தொடரும்
பரசுராமர் பிருகு தீர்த்தத்தில் நீராடி நன்மை பெற்றதாக லோமசர் கூறவும், பாண்டவர்களும் அந்த தீர்த்தத்தில் நீராடினர்.
லோமசர் மூலமாக கடந்த காலத்தில் நிகழ்ந்த அரிய சம்பவங்களை அறிந்து கொண்டதற்காக, தர்மர் நன்றி கூறினான். நகுல, சகாதேவர்கள் தங்களின் மனம் அமைதி பெற்றதாக கூறினர். பீமனும் அதை வழிமொழிந்தான். திரவுபதியும் இதை
ஆமோதித்தவளாய், “”வலியே வலிமை தருவதாக உள்ளது. காண்டவப் பிரஸ்தத்தில், நாம் நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தால், இந்த உலகத்தின் ராஜாக்களுள் ஒருவராகத் தான் இருந்திருப்போம். இத்தனை அரிய தகவல்கள் நமக்கு தெரிந்திருக்காது. எனவே, வனவாச காலத்தை, ஒரு வரப்பிரசாதமாகவே நான் கருதுகிறேன் ,” என்றாள்.
இதையடுத்து தர்மன், “”மகரிஷியே! அகத்தியர் சிரஞ்சீவியாயிற்றே… இப்போதும் அவர் சஞ்சாரம் செய்கிறாரா? ” என்று தர்மன் கேட்கவும், லோமசர் அகத்தியர் பற்றிய எண்ணத்தில் மூழ்க ஆரம்பித்தார்.
“”பாண்டவர்களே! அகத்தியர் பற்றி முழுமையாக அறிய விரும்பும் உங்களின் எண்ணம் எனக்கு மனநிறைவு தருகிறது. வலாசுரன், வாதாபி மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான அசுரர்கள் அழிய அவர் காரணமாக இருந்தார். குறுமுனியான அவர் ஏழுகடலையும் கமண்டலத்தில் அடக்கியவர். பின் அதைக் குடித்து ஜீரணமும் செய்தவர்,” என்று பீடிகையுடன் தொடங்கினார். பாண்டவர்களும் அதுபற்றி கேட்கத் தயாராயினர்.
“முன்னதாக விருத்திகாசுரன் என்னும் அசுரனைப் பற்றி அறிய வேண்டியது அவசியம். இவன் எப்படி தோன்றினான் என்பதை தெரிந்து
கொள்ளுங்கள். திரேதாயுகத்தில், விண்ணிலுள்ள இந்திரன் சபை கேளிக்கை நிறைந்ததாக இருந்தது. ஒருநாள் ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனமாடியதில், இந்திரன் தன்னையே மறந்து விட்டான். இந்த வேளையில், பிரஹஸ்பதி என்னும் தேவகுரு சபைக்கு வந்தார். பலத்த குரலில், இந்திரனை அழைத்தும், அவன் நடனத்திலேயே கண்ணாய் இருந்தான். இதனால், மனம் வெதும்பிய குரு, இனி இந்திரசபைக்கே வரமாட்டேன் என்று சொல்லிப் புறப்பட்டார்.
குருவருள் இருந்தால் தானே செல்வம் நிலைக்கும். குரு விலகியதால், இந்திரனை இருள் சூழ்ந்தது. அவனது தேஜசும் குறையத் தொடங்கியது. கலக்கமுற்ற இந்திரன், குருவைத் தேடினான். அவரோ, பாதாள லோகம் சென்று விட்டார். தேவர்களை சோர்வு ஆட்கொண்டது. இந்திரன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், வியாழ குருவுக்கு பதிலாக வேறொரு குருவை ஏற்று, நலம் வேண்டி வேள்வி செய்யும் முடிவுக்கு வந்தான்.
பாண்டவர்கள் அதிர்ச்சியுடன், “குரு பகவான் விலகினால், இப்படியும் கூட ஆகுமா?” என்று கேட்டனர்.
“ஆம். நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானால் செல்வம், புகழ், ஆரோக்கியம், மகிழ்ச்சி எல்லாம் கிடைக்கும். அவர் பார்வை பட்டால் போதும். அனைத்தும் வசமாகும். இப்படி ஒரு வல்லமை அவருக்கு இருக்கிறது.”
“இப்படிப்பட்டவரை இந்திரன் அலட்சியப்படுத்தலாமா?”
“என்ன செய்வது? கேளிக்கையால் இந்திரனும் சிரமத்திற்கு ஆளானான் என்று வருங்காலம் தெரிந்து கொள்ள வேண்டாமா?”
“அப்படியானால், இவை எல்லாம் திட்டமிட்ட செயல்பாடுகளா?”
“ஒரு கோணத்தில் பார்த்தால், திட்டமிட்டது தான். இன்னொரு கோணத்தில் ஒன்றைத் தொட்டு ஒன்று என்ற இயல்பான போக்கு என்றும் கொள்ளலாம்”
“முடிவாக என்னவாயிற்று?”
“இந்திரன், புதிய குருவாக விஸ்வரூபன் என்ற அசுரச் சார்பானவரைக் குருவாக ஏற்றுக் கொண்டான்”
“ஆச்சரியமாக இருக்கிறதே?”
“அவனுக்கு வேறு வழியில்லை. விஸ்வ ரூபனுக்குத் தான் தகுதி அனைத்தும் இருந்தது”
“பிறகு?”
“பிறகென்ன.. அமரலோகத்தின் நலனை உத்தேசித்து, இந்திரன் விஸ்வரூபனைக் கொண்டு வேள்வி புரிந்தான். மூன்று சிரசுகளைக் கொண்ட இந்த விஸ்வரூபன், துவட்டா என்பவனின் மகன்”
“மூன்று சிரசுகளா?”
“ஆம்…. தேவர்களுக்கு எதிரானவனும் கூட…”
“எதிரியோடு இந்திரன் எப்படி இணைந்தான்?”
“குருவருள் விலகினால் தீயதெல்லாம் நல்லது போலத் தோன்றும். விஸ்வரூபனைக் கொண்டு வேள்வி புரிந்தான் இந்திரன். மனதில் அசுரர்களையும், உதட்டில் தேவர்களையும் சொல்லி விஸ்வரூபன் அவிர்பாகம் அளித்தான்.”
“முடிவாக என்ன நடந்தது?”
“முடிவில் இந்திரன் விழித்துக் கொண்டான். நன்மை செய்வது போல, துரோகம் செய்த விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் வஜ்ராயுதத்தால் வெட்டி விட்டான். இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அதை தேவர்கள், பெண்கள், தண்ணீர், மரம், மண் என ஐந்து அம்சங்கள் மீது ஏற்றி விலகிக் கொண்டான்.
அது முதல் தேவர்களுக்கு அச்சமும், பெண்களுக்கு மாதவிடாயும், தண்ணீரில் நுரையும், மரத்தில் பிசினும், மண்ணில் உவர்தன்மையும்
உருவாயிற்று.”- இதைக் கேட்ட திரவுபதியின் மனம் அதிர்ச்சி அடைந்தது.
“”சரி….பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விலக்கு பெற்ற இந்திரனிடம், வியாழ குரு திரும்ப வந்தாரா?”
“”அது எப்படி வருவார்? …. இந்திரனுக்கு இதன் பிறகே கடுமையான சோதனைகள் காத்திருந்தன” என்றார் லோமசர்.
இதையடுத்து மீதிக்கதையையும் கேட்க பாண்டவர்கள் ஆர்வமாயினர்.
– தொடரும்
விஸ்வரூபனை இழந்து விட்ட அவன் தந்தையான துவட்டா, இந்திரனை அழிக்க ஒரு பெரும் வேள்வி செய்தான்.
அந்த வேள்வித்தீயில் இருந்து விருத்திகாசுரன் என்னும் அசுரன் தோன்றினான். அவனை இந்திரன் வஜ்ராயுதத்தோடு எதிர்த்தான். ஆனால், அது ஒடிந்து போனது தான் மிச்சம். அசுரனை எதிர்க்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான். இதன்பின், விண்ணுலகைக் கைப்பற்றிய விருத்திகாசுரன், தன் கொடுங்கோல் ஆட்சியைத் தொடங்கினான்.
இந்திரனின் தவறால், அவன் மட்டுமல்ல… தேவலோகமே பாதிப்படைந்தது. இந்நிலையில், அவன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, அவர் இதற்குரிய தீர்வை மகாவிஷ்ணுவே தரமுடியும் என்று அனைவரோடும் வைகுண்டத்துக்கு சென்று நின்றார்.
மகாவிஷ்ணுவும் ஏதுமறியாதது போல, என்ன நடந்தது என்று கேட்க இந்திரன் கதறிக் கொண்டு காலில் விழுந்து நடந்ததைச்
சென்னான்.
“”இந்திரா…. நீ தலைவன்! தலை இருப்பதால் மட்டும் தலைமைப் பொறுப்பு வந்து விடுவதில்லை. தலையைத் தாங்கும் உடல் போல, நீ தேவர்களைத் தாங்கினால் தான் நீ கடமையைச் சரியாகச் செய்தவனாவாய். உன் தவறால் எத்தனை பெரிய விளைவு உண்டாகி விட்டது பார்த்தாயா?” என்று கேட்க, இந்திரனும் தவறை ஒப்புக்கொண்டான்.
“”மகா பிரபு….. இது எனக்கு மட்டுமல்ல. இனி வரும் காலத்தில் சகலருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். நான் எக்காலத்திலும் குரு நிந்தனை செய்ய மாட்டேன். உல்லாச கேளிக்கையில் ஈடுபட மாட்டேன்,” என்றான்.
கண்களை மூடித் திறந்த மகாவிஷ்ணு, “விருத்திகாசுரனை எதிர்த்து நீ வெல்வதே இதற்கான பரிகாரமாக அமையும். வஜ்ராயுதத்தை விட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்த ஆயுதம் இப்போது தேவை. அதனை தேவர்களாகிய நீங்களே செய்வது தான் உங்களுக்கும் பெருமை.
விருத்திகாசுரன் வேள்வித்தீயில் தோன்றியவன். நெருப்பை நீர் அணைப்பது போல, வேள்விப்பயனை அதற்கு மேலான தியாகத்தால் மட்டுமே வெல்ல முடியும். இதற்கு தியாக உள்ளமே முதல் தேவை. அதன் பிறகு தான், ஆயுதத்துக்கான மூலத்தை தேடிச் செல்ல இயலும்,” என்று பீடிகையுடன் பேசிய விஷ்ணுவைக் கண்ட தேவர்கள் புரியாமல் விழித்தனர்.
புன்னகைத்த விஷ்ணு, “”நீங்கள் ததீசி என்னும் முனிவரிடம் செல்லுங்கள். அவர் தன்னலம் இல்லாதவர். பாற்கடலைக் கடைந்த போது தேவர், அசுரர்கள் தங்களிடமிருந்த ஆயுதங்களை எல்லாம் அந்த முனிவரிடம் அளித்தனர். அதன் பின் அமிர்தம் பெற்ற அவர்கள், ஆயுதம் இனி தேவையில்லை எனக் கருதி விட்டு விட்டனர். ஆபத்தான அந்த ஆயுதங்களை தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்ட முனிவர், அவற்றைத் தன் முதுகெலும்பாக்கி கொண்டார். அந்த எலும்பினால் செய்யப்படும் ஆயுதத்தை விருத்திகாசுரனால் வெல்ல முடியாது” என்று கூற இந்திரன் தயங்கி நின்றான்.
“”என்ன தயக்கம் இந்திரா?”
“”ஓரு முனிவரை அழித்து ஆயுதம் செய்யலாமா?”
“”ததீசி போன்ற தியாக மனம் படைத்தோருக்கே வேள்விச் சக்தி கட்டுப்படும். அதனால் தான், இப்போதைய முதல் தேவை தியாகம் என்று கூறினேன்” என்றார் விஷ்ணு.
இந்திரனும் ததீசி முனிவரிடம் செல்ல, அவரும் மகிழ்ச்சியுடன் தன் முதுகெலும்பைத் தர முன் வந்தார்.
யோகநிலையில் அமர்ந்து தன் உயிரை உடம்பிலிருந்து பிரித்தார். அந்த உயிர் அழியாத சொர்க்கத்தை அடைந்தது. உடலை அக்னியால் சாம்பலாக்க, அதில் முதுகெலும்பு வைரமாக ஜொலித்தது. விஸ்வகர்மா மூலம் அதைப் புதிய ஆயுதமாக்கிப் புறப்பட்டான் இந்திரன்.
அந்த ஆயுத பலத்தை தாங்க முடியாத விருத்திகாசுரன் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். அந்த ஆயுதத்திடம் இருந்து தப்பிக்க, ஒரு மறைவான இடத்தில் மூச்சை அடக்கி தவத்தில் ஆழ்ந்தான்.
அவனைக் கண்டுபிடிக்க முடியாத இந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டான்.
“”இந்திரா… நீ இப்போதே போய் அகத்திய முனிவரைப் பார். அவர் மனம் வைத்தால் கடல் நீர் முழுவதையும் குடித்து விட முடியும். கடல் வற்றினால் அசுரன் புலப்படுவான்” என்றார்.
இந்திரனும் அகத்தியரின் உதவியை நாடினான். அவரும் சம்மதித்து கடல்நீரை குடித்தார்.
விருத்திகாசுரன் கண்ணுக்குப் புலப்பட, புதிய ஆயுதத்தால் இந்திரன் கொன்றான். தவத்தில் இருந்தவனைக் கொன்றதால், இதுவும் பிரம்மஹத்தி தோஷமாக மாறி விரட்டியது.
இந்திரனின் இந்த நிலை, நகுஷன் என்ற அசுரனை வேறுவிதமாகத் தூண்டியது.
பிரம்மஹத்திக்கு ஆளானதால், இந்திரனால் தேவர்களுக்கு தலைமை தாங்க இயலாது என்பதை உணர்ந்த அவன், இந்திரலோகத்தை
தன் வசமாக்கியதோடு, இந்திராணியையும் தனது அடிமை என அறிவித்தான்.
அத்துடன் நூறு அஸ்வ மேத யாகங்களையும் செய்து முடித்தான். இதை அறிந்த இந்திராணி மனம் கலங்கினாள்.
ஒருபுறம் தன் கணவன் இந்திரன் சாபப்பட்ட நிலை… மறுபுறம் இந்திரலோகமே அசுரமயமாகி விட்ட கொடுமை…. இதற்கு ஒரே தீர்வாக,
வியாழ குருவின் உதவியை நாடிச் செல்ல முடிவெடுத்தாள்.
ஏனென்றால், இவ்வளவும் குருவை அலட்சியப்படுத்தியதால் தானே விளைந்தது…!
இந்திராணி கண்ணீர் மல்கி, எங்கிருந்தாலும் நேரில் பிரசன்னமாகும் படி வியாழகுருவை வேண்டினாள். தவறினால், தன்னை நெருப்பில் அர்ப்பணம் செய்ய முடிவு செய்தாள்.
இந்திராணியின் இந்த முயற்சி குருவைக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்தியது. அவளுக்காக இந்திரனை மன்னிக்கத் தயாரானார் அவர்.
இதற்குள் நகுஷன் இந்திர பதவி ஏற்க தயாரானான். அவனை அழைத்து வர சொர்ணப் பல்லக்கு தயாராகி விட்டது. இதை அறிந்த இந்திராணியின் மனம் பதைத்தது. அப்போது வியாழ குரு ஒரு உபாயம் செய்தார். அது….
– தொடரும்
அசுரன் நகுஷனை இந்திரலோக தர்பார் மண்டபத்துக்கு சப்த ரிஷிகளே பல்லக்கில் தூக்கி வர வேண்டும் என்ற உபாயத்தை வியாழ குரு செயல்படுத்த தயாரானார். அப்படி வந்தால் தான் இந்திராணி அவனை ஏற்பாள் என்று நகுஷனுக்கு கூறப்பட்டது. அவனும் உற்சாகமானான்.
ரிஷிகளை பல்லக்கு தூக்கச் சொல்வதை விட, வேறு அவமானம் இருக்க முடியாது. பல்லக்கு என்பது இன்பத்தின் குறியீடு. அதில் ஒருவரே அமரலாம். ஆனால், அதைத் தூக்க நான்கு பேர் வேண்டும்.
பூவுலகில் இன்பம் அனுபவிப்போர் பல்லக்கில் இருக்கும் ஒருவரைப் போல ஒரு பங்கே…. அதை அளிப்பதற்காக துன்பப்படுகிறவர்கள் தான் நான்கு பங்காக உள்ளனர்.
சப்தரிஷிகளும் தேவர்களின் நன்மைக்காக நகுஷனைச் சுமக்கத் தயாராயினர். அகத்தியர் முன்வந்து பல்லக்கைத் தூக்கினார். உயரம் குறைந்தவரான அவர், பல்லக்கின் நடுவில் நிற்க நேர்ந்தது. பல்லக்கு புறப்பட்டது. அகத்தியருக்கு பல்லக்கின் மூங்கில் சரியாக வசப்படாததால், அவர் தடுமாறியபடி நடந்தார். இதனால் பல்லக்கு குலுங்கியது. நகுஷன் கோபத்துடன், திரைச்சீலையை விலக்கிப் பார்த்தான். குலுங்கலுக்கு அகத்தியரே காரணம் என்பதை அறிந்து கொண்டு, “சர்ப…சர்ப…’ என்று கத்தினான்.
அதாவது, பாம்பு போல வளைந்து போக வேண்டாம். நேராக வேகமாக போக வேண்டும் என்னும் பொருளில் கத்தினான்.
பல்லக்கு தூக்கிப் பழக்கம் இல்லாத சப்தரிஷிகள் நிதானமாகவே சென்றனர். நகுஷனின் கோபம் அதிகரித்தது. உடனே தன் இடதுகாலால் அகத்தியரின் தோளில் உதைத்த நகுஷன், “சர்ப..சர்ப…’ என்றான். அகத்தியர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
ரிஷிகளுக்குக் கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால் அது மோசமான விளைவைத் தரும். அகத்தியர் பல்லக்கை விட்டு விலகியதோடு,
மற்றவர்களையும் தடுத்து நிறுத்தினார்.
கோபத்துடன், “”அரக்கப்பதரே! என்னை எட்டி உதைத்த உன்னை சபிக்கிறேன். உன் வேள்விப்பயன் பயனில்லாமல் போகட்டும். பாம்பு போல நாங்கள் செல்வதாக கோபப்பட்ட நீ, அந்த பாம்பாகவே ஆகக் கடவாய்!” என்றார்.
அவ்வளவு தான்!
நகுஷன் பாம்பாக மாறினான்.
தாயம் விளையாடும் பரமபத கட்டத்தில் இவனே பெரிய பாம்பாக நிற்பவன். உச்சிக்கே சென்றாலும், இவன் வசம் சிக்கி விட்டால் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட வேண்டியது தான். நகுஷனும் இந்திரப்பதவியை அடையும் முன் ஆத்திரத்தால் அதை இழந்து பாம்பானவன் தானே?
எப்படியோ நகுஷன் இந்திரனாகும் ஆபத்து குரு பகவனால் நீங்கியது. அகத்தியர் நகுஷனைச் சபிக்க எல்லாம் நலமானது. அதன் பின்
ஒளிந்திருந்த இந்திரனும் திரும்ப வந்து வியாழ குருவிடம் மன்னிப்புக் கோரி இந்திரபதவியை அடைந்தான்.
அகத்தியர் மட்டும் இல்லாவிட்டால், தேவர் உலகமே ஸ்தம்பித்திருக்கும். அவராலேயே கடலைக் குடித்து விருத்திகாசுரன் ஒளிந்திருந்த இடத்தைக் காட்ட முடிந்தது. அவரே நகுஷனிடம் இருந்தும் தேவர்களைக் காத்தார்.
அகத்தியர் இப்படி சாதித்தவை பல! – என்று லோமசர் கூறவும் தர்மன் உள்ளிட்ட பாண்டவர்கள் பெருமூச்சுடன் “அப்பாடா’ என்றனர்.
“உருவில் சிறியவர் என்றாலும், கருவில் திருவுடையாயும், அருளில் மலை போல உயர்ந்தவராயும் அகத்தியர் விளங்குவதை புரிந்து கொண்டோம்,” என்றான் சகாதேவன்.
“”நீங்கள் அவரை மலையோடு ஒப்பிடவும் தான், விந்தியமலையை அவர் தடுத்த சாகச நிகழ்வும் என் நினைவுக்கு வருகிறது” என்றார் லோமசர்.
“”விந்திய மலையை தடுத்தாரா… எப்படி? எதற்காக?” – என்று வேகமாக கேட்டான் சகாதேவன்.
லோமசரும் கூறத் தொடங்கினார்.
முந்திய யுகங்களில் எல்லாம் மலைகளுக்கு பறக்கும் சக்தி இருந்தது. ஏதோ ஒரு தேவசக்தியோ அல்லது அசுரசக்தியோ மலைகளின் மேல் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தியதால் அவை இப்படி இருந்தன. அந்த வகையில், மேருமலையை தேவ சக்திகள் ஆட்சி செய்தன.
இதனால் சூரியனும் அதைச் சுற்றி வந்தான். இது ஒரு பிரதட்சிண வழிபாடு போல ஆயிற்று. இதைக் கண்ட விந்தியமலைக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. அசுர சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தால் தாழ்வு மனப்பான்மை மிகுதியாக இருக்கும். விந்தியமலை தாழ்வு
மனப்பான்மைக்கு ஆளாகி, சூரியன் தன்னையும் வலம் வந்து வணங்க வேண்டும் என்று விரும்பியது. ஆனால், சூரியன் அதன் விருப்பம் அறிந்து சிரித்தான்.
“”விந்தியனே! பிரபஞ்ச விதி இது! தேவசக்திகளுக்கு உட்பட்ட மலைகளை வலம் வந்தால் தான் இரவு, பகல் சீராக உண்டாகும். உயிர்கள் நலமாக பூமியில் வாழும். இது புரியாமல் தவறாக எண்ணுகிறாய்,” என்றான் சூரியன்.
இதனால் விந்தியமலைக்கு கோபம் ஏற்பட்டது. மேருமலையை விட தான் உயரமானவன், வலிமை வாய்ந்தவன் என்பதைக் காட்டுவதற்காக பெரிதாக வளரத் தொடங்கியது. சூரியனின் சஞ்சாரம் தடைபட்டு பூமியில் இருள் சூழ்ந்தது. உயிர்கள் உலகம் அழிந்து விடுமோ என அஞ்சின.
தேவர்கள் திருமாலைச் சரணடைந்து வேண்டினர். அவர் அகத்தியர் உதவியைப் பெறக் கட்டளையிட்டார். அகத்தியரும் விந்திய மலையைக் கட்டுப்படுத்தப் புறப்பட்டார்.
“விந்தியனே! ஏன் இப்படி வளர்ந்து கொண்டே போகிறாய்?”
“சிகரங்களில் நானும் சளைத்தவன் இல்லை என்பதை உணர்த்த தான் அகத்தியரே!”
“நல்லது. நான் தென்பகுதிக்குச் செல்கிறேன். எனக்கு வழி விடு”
“என்னை நீங்கள் இப்படி சோதிக்கலாமா?”
“நான் திரும்பிய பிறகு நீ விருப்பம் போல வளர்ந்து கொள்”
“சரி அகத்தியரே”
“சரி என்று கூறி விட்டு, நான் சென்ற பின் வளர்ந்து விட்டால் சாபத்திற்கு ஆளாகாதே” என்ற அகத்தியருக்கு விந்தியமலை வழி விட்டது. இதன் பின் சூரியனின் செயல்பாடு தடையில்லாமல் நிறைவேறியது,” என்றார் லோமசர்.
இதைக் கேட்ட பீமன், “”அகத்தியர் இதன் பின் திரும்பி வந்தாரா” என்றான்.
“விந்தியன் சிந்திக்கட்டும் என்ற எண்ணத்தில், அகத்தியர் தென்பகுதியில் நீண்டகாலம் தங்கி விட்டார். மகாஞானியான அவர் கடல் நீரைக் குடித்ததால், அசுரர்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டனர்,” என்ற லோமசரை, சகாதேவன் இடைமறித்தான்.
“அகத்தியர் கடலைக் குடித்தார் என்றீர்கள். கடல் இல்லாவிட்டால் பூமியில் உயிர்கள் எப்படி வாழ முடியும்? நீரின்றி அமையாதே உலகு?” என்று கேட்டான்.
– தொடரும்
சகாதேவன் கேட்ட அந்தக் கேள்வி லோமசரை, வற்றிய சமுத்திரம் எப்படி நிரப்பப்பட்டது என்னும் சம்பவத்துக்குள் இழுத்துச் சென்றது.
கடல்நீர் இல்லாததால் மழை இல்லாமல் பூலோகம் வறண்டது. இதற்கு தீர்வு காண தேவர்கள் பிரம்மாவின் உதவியை நாடினர்.
“”படைப்புக்கடவுளே! அசுரனை அழிக்க அகத்தியரைக் கொண்டு கடலைக் குடிக்க வைத்தீர்கள். அதனால், பூலோகமே பாலைவனமாகி விட்டது. வெப்பம் தகிக்கிறது. உயிர்கள் வாழ வழியில்லாமல் தவிக்கின்றன. மீண்டும் கடலை பெருகச் செய்து உயிர்களுக்கு
நல்வழி காட்ட வேண்டும்,” என்று வேண்டினர்.
அவர்களிடம் பிரம்மா, “தேவர்களே! காரணமில்லாத காரியம் இல்லை. அதன் அடிப்படையில் எது நடக்க வேண்டுமோ அது நடந்தது. இனியும் அதன்படியே நடக்கும். பகீரதன் என்னும் உத்தமனால் பூவுலகில் நீர்த்தேவை பூர்த்தியாகும். நீங்கள் உங்கள் கடமையைச் சலிப்பின்றி செய்யுங்கள்,” என்றார். தேவர்களும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.
“பாண்டவர்களே! பகீரதனால் நீர்வளம் உண்டான வரலாற்றைக் கூறுகிறேன். கேளுங்கள். இந்த வரலாறுக்கு முன்னதாக சகரன் என்னும் இக்ஷ்வாகு குலத்து மன்னன் குறித்து அறிந்து கொள்வது அவசியம். இவன் பகீரதனின் முப்பாட்டன். சகரனுக்கு வைதர்ப்பி, சைப்யை என்று இரு மனைவிகள். இருவருக்கும் புத்திரப்பேறு வாய்க்கவில்லை. இதனால், சகரன் சிவனை நோக்கி தவமிருந்தான்.
ஈசனும் காட்சி தந்து வரம் அளித்தார். எப்படித் தெரியுமா? – லோமசர் இடைவெளி விட, பாண்டவர் முகங்களில் ஒரு எதிர்பார்ப்பு!
“இரு மனைவிகளில் ஒருத்திக்கு பூரணமாக ஒரு பிள்ளை பிறக்கும். ஆனால், அவன் அசுர குணம் கொண்டிருப்பான். இன்னொருத்திக்கு ஒன்றல்ல… இரண்டல்ல… 60 ஆயிரம் பிள்ளைகள் பிறப்பர். இவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒரே பொழுதில் நாசம் அடைவர். உன் முன் பிரசன்னமான இந்த காலகட்டத்தில் இவ்வாறே வரம் தர இயலும்,” என்று கூறியவராக சிவன் மறைந்தார்.
சகரனும் பிள்ளைகளின் பிறப்பை எதிர்நோக்கி காத்திருந்தான். இருவரில் ஒருத்தி சுரைக்காய் போல ஒரு உருவத்தைப் பெற்றாள்.
இன்னொருத்திக்கு பூரணமான பிள்ளை பிறந்தது. குறைப்பிரசவம் போன்ற சுரைக்காயை வீசி எறிய முற்பட்டபோது வானில் அசரீரி ஒலித்தது.
“வீசி எறியாதே… இதனுள் 60 ஆயிரம் ஜீவ அணுக்கள் உள்ளன. இதைப் பிளந்து இதன் அணுக்களை நெய்யோடு கலந்து 60 ஆயிரம் குடங்களில் வைத்தால், பிள்ளைகள் உரு கொள்வார்கள்” என்றது. அதன்படியே செய்ய பிள்ளைகள் தோன்றினர். இவர்கள்
“சகர புத்திரர்’ என அழைக்கப்பட்டனர். பூரணமாக பிறந்த பிள்ளையின் பெயர் “அசமஞ்சன்’. பிள்ளைகள் அனைவரும் நல்ல விதமாய் நடந்து கொள்ளாது அட்டகாசம் புரிந்தனர். இப்படி பிள்ளைகள் பிறந்ததற்கு, இல்லாமல் போனால் நல்லது என உலகத்தில் மற்றவர்கள் எண்ணினர்.
சகரனோ, அவ்வளவு பேரும் ஒரே சமயத்தில் நாசமடைவர் என்று சிவன் சொன்னதை எண்ணிப் பார்த்தான். பாசம் மேலிட்டதால், அவர்கள் செய்த அட்டகாசத்தை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், அசமஞ்சனுக்கு திருமணம் முடிந்தது. அம்சுமான் என்ற பேரப்பிள்ளை பிறந்தான். சகரன் பூலோகத்தில் பெரும் புகழும், சொர்க்கத்தில் நிலையான இடமும் பெற விரும்பி அஸ்வமேதயாகத்தை தொடங்கினான்.
அதற்காக ஒரு உயர் ஜாதி வெள்ளைக் குதிரையை சகல தேசங்களுக்கும் அனுப்பி வைத்தான். அஸ்வமேதயாகம் செய்வோர் இப்படி அனுப்புவது மரபு. அந்தக் குதிரை சகரனின் நாட்டை விட்டு, கடல்வற்றிய பாகத்தை அடைந்தது. அதன் பின் குதிரையைக் காணவில்லை. குதிரை வராவிட்டால், அஸ்வமேதயாகம் நின்று போவதுடன், யாகம் நடத்தும் மன்னனின் பெருமை அனைத்தும் கெட்டுப் போகும்.
எனவே, தன் 60 ஆயிரம் பிள்ளைகளுடன் அதைத் தேடத் தொடங்கினான். எப்பாடு பட்டாவது குதிரையுடன் தான் வர வேண்டும் என்று கட்டளையிட்டான். அவர்கள் பாலைவனப்பகுதியை அடைந்தனர்.
குதிரையின் குளம்படித் தடயம் வழிகாட்ட, பாலைவனத்தின் நடுவிலுள்ள பிளவில், கபிலர் என்னும் முனிவர் சகல ஜீவராசிகளுடன் தவம் புரிவதைக் கண்டனர். அவரது பர்ணசாலை லாயத்தில் அவர்களது குதிரை கட்டப்பட்டிருந்தது. அதை அவிழ்த்து தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர்.
கபில முனிவர் அவர்களைத் தடுக்க முயன்றார். ஆனால், அவர்கள் அவரை அலட்சியப்படுத்தினர். விஷ்ணுவின் அம்சமான கபிலர், கடும் கோபத்தோடு பார்த்திட, அவ்வளவு பேரும் சாம்பலாயினர். இதை அறிந்த சகரன் மனம் வருந்தினான். உடனே பேரனான அம்சுமான், குதிரையோடு நிச்சயம் திரும்பி வருவதாகச் சபதம் செய்து விட்டு, கபிலரைக் காணப் புறப்பட்டான்.
முனிவரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றான். கபிலரும் அம்சுமானின் பணிவைக் கண்டு, “உனக்கு விருப்பமானதைக் கேள்’ என்றார்.
அப்போது அவரிடம், “”நான் சகரனின் பேரன். என் தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்ற உதவுங்கள். யாகத்தை நடத்த குதிரையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,” என்று வேண்டினான். கபிலரும் குதிரையை அவன் வசம் ஒப்படைத்தார். குதிரையுடன் வந்த அம்சுமான் அஸ்வமேதயாகத்தை நிறைவேற்றினான். இதன் பயனாக சகரன் இறந்து சொர்க்கத்தை அடைந்தான். ஆனால், அவனது 60 ஆயிரம் பிள்ளைகளும் கபில முனிவரால் சுட்டெரிக்கப்பட்ட நிலையில், ஆத்மாக்களாக அலைந்தனர்.
– தொடரும்
கபிலரிடம் இருந்து குதிரையைக் கொண்டு வந்த சகரனின் பேரனான அம்சுமான் இஷ்வாகு குலத்தின் மன்னராக ஆட்சி செய்தான். அவனுக்கு பிறந்த பிள்ளையான திலீபன் ஆட்சிக்கு வரவும், அம்சுமான் சொர்க்கம் அடைந்தான். திலீபனின் மகனே பகீரதன். இந்த சமயத்தில் பூமியில் கடல் பெருகாமல் நீரின் தேவை அதிகரித்தது. உயிர்கள் செய்வதறியாமல் தவித்தன.
திலீபன் ராஜரிஷிகளை அழைத்து ஆலோசித்தான்.
அவர்கள், “”திலீபா! உன் முன்னோர்களில் 60 ஆயிரம் பேர் கபில முனிவரின் கோபத்திற்கு ஆளாகி சாம்பலாகி விட்டனர். பாலைவன வெளியில் சாம்பல் திட்டுகள் இன்னும் அப்படியே உள்ளது. அவர்கள் ஆத்மா சாந்தியடைய அங்கே நீர் பெருக வேண்டும். அதிலும் புண்ணிய நதியான கங்கை, தேவலோகத்தை விட்டு பூமியில் பாய்ந்து அந்த சாம்பல் திட்டைக் கரைத்தால் அவர்கள் சாந்தி பெற்று சொர்க்கம் சொல்வர்,” என்றனர்.
இதையறிந்த பகீரதன் ராஜரிஷிகளின் உதவியை நாடினான்.
“”பூமியில் கங்கை பாய வேண்டும் என்றால் நீ தவமிருந்தாக வேண்டும். வேறு எது செய்தாலும் இந்த துயரம் தீராது. அதுவரை உங்கள் முன்னோர்களின் ஆத்மா தவித்தபடியே இருக்கும்,” என்றனர்.
மகனை ராஜகுமாரனாக்கிப் பார்க்காமல், தவம் புரியச் சொல்வது திலீபனுக்கு பிடிக்கவில்லை. என்ன செய்வதென தெரியாமல், இதை சிந்தித்து சிந்தித்தே திலீபனுக்கும் உயிர் பிரிந்தது.
அதன் பின் பகீரதன், அனைத்திற்கும் ஒரே தீர்வு தவம் செய்வது தான் என்ற முடிவுக்கு வந்தான். நாட்டை மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்வதற்கு இமயமலையைத் தேர்ந்தெடுத்தான். வெள்ளிப்பனி மலைச் சிகரத்தை அடைந்தான்.
பகீரதனின் கடும் தவம் தொடங்கியது. ஒரு வருடம்… இரு வருடம் அல்ல….! ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது. பனிமலையின் குளிரைப் பொருட்படுத்தாமல், ஒற்றைக்காலில் நின்று அவன் மேற்கொண்ட தவத்தின் சக்தி, இமயத்திற்கு மாதாவான கங்கையை உலுக்கத் தொடங்கியது.
மானிட வடிவம் தாங்கிய கங்கை, பகீரதனுக்கு நேரில் காட்சியளித்தாள்.
“”என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டாள்.
“நீ தான் வேண்டும்… பூவுலகில் நீ நடந்து வந்தால் தான், என் முன்னோர்களுக்கு நற்கதி உண்டாகும். என் முன்னோர் போல உள்ள மற்றவர்களும் உன்னால் கடைத்தேறுவர். அது மட்டுமல்ல. வற்றிப் போன கடலும் பெருகும். கடல் பெருகினால் மழை பொழியும். மழைவளம் சிறந்தால் பூமி செழித்து உயிர்கள் நலம் பெறும். மனிதர்களும் பாவத்தைச் சுமக்காமல் உன்னிடம் ஒப்படைத்து விட்டு நற்கதி பெறுவர். இத்தனை நன்மைகளும் நிகழ நீ பூமிக்கு வரவேண்டும் தாயே…..” என்றான் பகீரதன்.
அதைக் கேட்ட கங்கா மாதா சிலிர்த்தாள்.
அவள் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது.
“பகீரதா…. துளியும் சுயநலம் இல்லாமல் உன் முன்னோர்கள், பூவுலக உயிர்கள் அனைவருக்காகவும் நீ செய்த தவமும், கேட்ட வரமும் என்னை மகிழ வைத்து விட்டது. உனக்காக பூமியில் தவழவும் சித்தமாகி விட்டேன். ஆனால், நான் பொங்கிப் பெருகி வரும் போது, என்னைத் தாங்கும் வலிமை பூமிக்கு இல்லையே! அது பிளவுபட்டு, நான் பாதாள உலகை சென்று சேர நேரிடும். என்னைத் தாங்கிப் பிடித்து வழிப்படுத்த சிவன் ஒருவரால் மட்டுமே முடியும். நீ அவர் குறித்து தவம் செய்யத் தொடங்கு,” என்றாள்.
அடுத்த நொடியே பகீரதன் சிவனைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான். அதிகம் சோதிக்க விரும்பாமல், சிவன் விரைவில் காட்சியளித்து, கங்கையைத் தலையில் தாங்கி பூமியில் விழச் செய்ய வரம் அளித்தார்.
அதன்படி கங்கையும் பொங்கி எழுந்தாள்.
சிவபெருமான் ஜடை மேல் தாங்க, அங்கிருந்து வழிந்தோடி, பத்ரிநாத் என்னும் தலத்தில், திருமாலின் பாதங்களை வருடிக் கொண்டு ஓடத் தொடங்கினாள். அப்படியே மூன்று கூறாக பிரிந்தோடிய கங்கை, கடைசியில் கடலை அடைய சமுத்திரம் பெருகியது.
கங்கையின் கரையில் பகீரதன் பிதுர் தர்ப்பணத்தைச் செய்ய, 60ஆயிரம் பிதுர்களும் மோட்ச கதியை அடைந்தனர். பூலோகத்திலுள்ள ரிஷிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குரிய பிதுர் கடமையைச் செய்து பகீரதனை வாயார வாழ்த்தினர்.
அகத்தியரில் தொடங்கி, பகீரதன் வரையில் முடித்த லோமச முனிவரின் பேச்சு பாண்டவர்களுக்கு தெளிவைத் தந்தது.
“இந்த பூமியில் எத்தனை விதமான வாழ்க்கைப் பாடுகள்? எத்தனை யோகிகள்..! எத்தனை ஞானிகள்…! ” என்றான் தர்மன்.
“அது மட்டுமா? பகீரதன் போல தன்னலம் கருதாத ஒருவனும் பூமியில் இருக்க முடியுமா? வானுலக நதியை பூமிக்கு கொண்டு வந்து விட்டானே…! அடேயப்பா! எப்பேர்பட்ட முயற்சி…” என்று வியந்தான் பீமன்.
“லோமசரே! பூமியில் கங்கை பாயவும் பூமியில் எல்லாம் சரியாகிவிட்டதா?” என்று கேட்டான் நகுலன்.
“சரியாகாமல் போகுமா? பூவுலகமே பகீரதனால் புத்துயிர் பெற்றது. கடின முயற்சி செய்பவர்களுக்கெல்லாம் பகீரதன் முன் உதாரணம் ஆனான்.
இதைத்தான் “பகீரத முயற்சி’ என்பார்கள். இருப்பினும், அசுர சக்திகள் இருப்பதால் அவ்வப்போது நல்ல விஷயங்களுக்கு சோதனை வரத் தான் செய்தது,” என்றார் லோமசர்.
பகீரதனின் முயற்சியால் பூவுலகுக்கு கங்கை வந்த விதத்தை, பாண்டவர்களிடம் சொல்லி முடித்தார் லோமசர். அப்போது அவர்கள் ரிஷபகூட மலையை அடைந்திருந்தனர். அங்கே நந்தை, அபர நந்தை என்னும் நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. அவற்றைக் கண்ட லோமசர் பெருமூச்சு விட்டார்.
இதைக் கவனித்த பீமன் மலையின் பின்னணியில் ஏதோ வரலாறு இருப்பதை அனுமானித்தான். அது உண்மை என்பது போல லோமசரின் பேச்சும் அமைந்தது.
“பாண்டு புத்திரர்களே! வனவாச காலம் உங்களுக்கு ஞான விலாச காலமாக அமைந்து விட்டது. இந்த ரிஷிப கூட மலை பற்றியும், நந்தை, அபர நந்தை நதிகள் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.
ரிஷபர் என்னும் முனிவரின் பெயராலேயே இந்த பர்வதம் ரிஷப கூட பர்வதம் என்றானது. இங்கே உற்பத்தியாகி ஓடி வரும் நந்தா நதியில் நீராடினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நாசமாகும்,” – என்ற லோமசரை நகுலன் இடையிட்டு தடுத்தான்.
“முனிவரே! நதிகளில் நீராடினாலே பாவம் போய் விடுகிறது என்றால் அது எவ்வாறு என்று விளக்கமாக கூறுங்கள். இதற்கு
முன்பும் பல தீர்த்தங்களில் நாங்கள் நீராடிய போது இதையே கூறினீர்கள். பொதுவாக ஓடி வரும் எந்த நதியில் குளித்தாலும்
பாவம் போய் விடுமா? பாவம் செய்திராத மகாத்மாக்கள் இது போன்ற நதிகளில் குளித்தால், அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மை
உண்டாகும்? இதற்கு நீங்கள் விளக்கமாக பதில் கூறுங்கள்,” என்றான்.
“அருமையாகக் கேட்டாய் நகுலா! இப்படித் தான் கேள்விகள் இருக்க வேண்டும். ஓடி வரும் எந்த நதியில் குளித்தாலும் பாவம் போகும் என்பது ஒரு அடிப்படையான உண்மை. பாவம் என்பது ஒரு வித உணர்வு நிலை! இதில் தெரிந்து செய்வது, தெரியாமல் செய்வது என்று இருவித தன்மைகள் உள்ளன. இதில் தெரியாமல் செய்தவை குளத்து நீரில் குளித்தாலும் போய் விடும். தெரிந்து செய்தவை நம்மை விட்டு நீங்கிட கங்கை, நந்தை போன்ற நதிகளில் உருக்கமான பிரார்த்தனையுடன் மூழ்கி எழ வேண்டும்.
நதி என்பது இயக்க சக்தியும், விசைப்பாடும் கொண்டது. கடலோடு தொடர்புடையதால் நதி கடலின் ஒரு பகுதி என்றும் கூறலாம். கடலே
உலகில் பெரியதும் வலியதுமாகும். நாம் மனம் ஒன்றி அவற்றில் மூழ்கி எழும் போது, அதன் அங்கமாகி விடுகிறோம். அந்த நேரத்தில் அந்த நதி நீரின் விசைப்பாடும் (சக்தி), அதில் கலந்துள்ள ஆயிரக்கணக்கான முனிவர்களின் மந்திர சக்தியுமே நம் உணர்வு பூர்வமான பாவங்கள் தீர காரணமாகின்றன. குறிப்பாக, ரிஷப கூட மலை மீது சாமான்யமான ஒருவனால் ஏற முடியாது. அப்படி ஏறினால் அவன் மீது கல் விழுந்து மரணம் அடைவான். கடுந்தவம் புரியும் தவசிகள் மட்டுமே இதில் ஏற முடியும். அவர்களும் கூட இங்கு வாய் பேசாது மவுனியாகவே செல்வர். இங்கு வாயுவான காற்றும் கூட சப்தமில்லாமல் மென்மையாக வீசும்.
ரிஷப முனிவர் இந்த மலைக்கு இப்படி விதித்திருக்கிறார். எனவே, இந்த மலையைத் தேடி வந்து தேவர்களும், ரிஷிகளும் தவம் புரிகின்றனர். அவர்களின் தவசக்தியோடு, அவர்கள் மீது பொழியும் மழை நீரே நந்தா, அபரநந்தாவாக ஓடி வருகிறது. இதுவே இதன் வரலாறாகும்,” என்றார்.
பாண்டவர்கள் அதைக் கேட்டு இரு நதிகளிலும் பரவசத்துடன் நீராடி ரிஷப கூட மலையை வணங்கினர். அப்போது சகாதேவன் இடையிட்டு, “”மகாமுனியே! இன்று இந்த நதியானது பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், அசுர சக்திகளால் இந்த பூமியே வறண்டு போனதாக கூறினீர்கள். அப்போது மக்கள் எப்படி தங்களைக் காத்துக் கொண்டனர். திரும்பவும் நீர்வளம் எவ்வாறு உண்டானது?” என்று
கேட்டான்.
“சொல்கிறேன்….! மழைக்கு அதிபதியான இந்திரன், விருத்திகாசுரனால் துன்பப்பட்டதும், ததீசி முனிவரின் தியாகத்தால் அவன் அழிந்த
வரலாறையும் நீங்கள் அறிவீர்கள் தானே! இந்திரனின் ஏவலுக்கு கட்டுப்பட்ட வருணனாலும் அப்போது செயல்பட முடியவில்லை. அப்போது ரிஷ்ய சிருங்கர் என்னும் முனிவரே மழை பொழிவுக்குக் காரணமாக விளங்கினார்” – என்ற லோமசர், ரிஷ்ய கூட மலை, நந்தா, அபரநந்தா நதிகளைப் பற்றிக் கூறி முடித்து ரிஷ்ய சிருங்க முனிவரின் வரலாற்றை ஆரம்பித்தார்.
“ரிஷ்ய சிருங்கர்…இந்த பெயருக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் திரவுபதி.
“இதற்கு பெரும் பொருள் இருக்கிறது தாயே! காஸ்யபர் என்னும் மகரிஷிக்கு பிள்ளையாக அவதரித்தவர் இவர். இவரது தலையில் மிருகம் போல கொம்பு ஒன்றும் இருந்தது!”
“என்ன… தலையில் கொம்பா”
“ஒரு முனிவருக்கும், ஒரு பெண் மானுக்கும் பிறந்த காரணத்தால் மான் இனத்துக் கொம்பு இவர் தலையில் அமைந்தது…”
“அது எப்படி ஆணும், மானும் இணைந்து குழந்தைப்பேற்றை பெற முடியும்?”
“நல்ல கேள்வி…. உண்மையில் ஒரு தேவ மங்கையே பிரம்ம சாபத்தால் பெண்மானாகப் பிறந்திருந்தாள். ஒரு வீரியமுள்ள ஆணோ
அல்லது ஆணின் வீரியமோ அவளை அடையும் போது சாப விமோசனம் ஏற்பட்டு உலகமே வியக்கும் விதத்தில் ஒரு பிள்ளை உண்டாகும் என்பது அவளின் பின்னால் உள்ள நிகழ்வாகும்”
“அடேயப்பா… விந்தையாக இருக்கிறது… சாபத்தால் மான் வடிவெடித்த பெண்ணுக்கு காஸ்யப முனிவரின் சம்பந்தம் எப்படி உண்டானது?”
“காஸ்யபர் ஒருநாள் குளிர்ந்த நீரில் தவத்தால் ஏற்பட்ட உஷ்ணத்தை தன் வீரியத்தோடு வெளியிட்டார். அப்போது தாகம் தீர்க்க வந்த பெண்மான் ஒன்று குடிக்க நேர்ந்தது. அதனால், சாபநிவர்த்தி பெற்று கருவைச் சுமக்கும் பாக்கியம் அடைந்தது. நீர் மீது கரு கொண்ட இவர் செல்லும் இடமெல்லாம் நீர்வளம் நிறைந்தது”
“”ஓ… அதனால் தான், இவர் காலடி பட்டாலே மழை பொழிகிறதா… அவரைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம்,” என்றார் தர்மன்.
லோமசரும் தொடர்ந்தார்.
– தொடரும்
ரிஷ்ய சிருங்கர் குறித்து லோமசர் தொடர்ந்து கூற ஆரம்பித்தார்.
“பாண்டவர்களே! ரிஷ்ய சிருங்கரின் பிறப்பு, தோற்றம் மட்டும் விநோதமாக இல்லை. அவர் வாழ்வும் அப்படியே. உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் ஆண், பெண் சேர்க்கையால் உருவானவையே. விதிவிலக்காக பெண் தேவையின்றி தோன்றும் உயிர்களும் உண்டு.
தாயே திரவுபதி! நீயே கூட துருபதனும், அவன் மனைவியும் செய்த புத்திரப் பேற்றுக்கான யாகத்தீயில் பூத்தவள் தானே? நீ ஒரு அதிசயமாக விளங்குவதைப் போலவே ரிஷ்ய சிருங்கரும் ஒரு அதிசயப் பிறவியே! காஸ்யப கோத்திரத்தின் வழி வந்த காஸ்யபர் என்னும் விபாண்டகரின் புத்திரரான ரிஷ்ய சிருங்கரின் பிறப்பு எப்படி அமைந்தது என்பதை நான் முன்பே கூறினேன். சபிக்கப்பட்ட தேவமங்கை மானாகத் திரியும் சமயம், விபாண்டகரிடம் இருந்து வெளிப்பட்ட வீரியம் நீரில் கலந்த நிலையில், அதன் மூலம் அந்த மான் கர்ப்பம் தரித்தது. சாப நிவர்த்தி பெற்ற தேவமங்கைக்கு பிறந்த ரிஷ்ய சிருங்கர், தன் தாயின் அம்சமாக தலையில் கொம்புடன்
பிறந்தார். விபாண்டகரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்தார். கண்ணால் ஒரு பெண்ணைக் கூட காணாதவராக வளர்ந்தார்… பிறந்தது முதல் வேதங்களைக் கேட்டு ஒரு முனிவராக வளர்ந்தார். இவை எல்லாமே விநோதமானவை தான்.
இதனாலேயே பஞ்சபூதங்கள் அவர் விருப்பத்துக்கு கட்டுப்பட வேண்டியதாகி விட்டது. குறிப்பாக நீர் மிசை வீரியம் கலக்கப்போய், அந்த நீரை ஒரு மான் குடித்ததால் பிறந்தவர் என்பதால் நீர் என்பது அவரின் அம்சமாகி விட்டது.
இதனால், அவர் எங்கிருந்தாலும் அந்த இடத்தில் மழை பொழிந்து குளிர்ச்சி மிக்கதாக மாறியது. வருணன் ரிஷ்ய சிருங்கரை விட்டு நீங்க முடியாதவனாக ஆகி விட்டான்.
இப்படியே காலம் அவரை போகவிடுமா என்ன?
வாழ்வில் பெண்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை லோமபாதன் என்ற அங்கதேசத்து அரசனால் அவருக்கு ஏற்பட்டது,” என்று லோமசர் சொல்ல, “இந்த உலகில் தான் மனிதர்களிலேயே எவ்வளவு விசித்திரங்கள்,” என்றான் சகாதேவன்.
“சகாதேவா…. அதற்கு பேர் தான் சிருஷ்டி மாயை. அது செயல்படாமல் போனால் மனித வாழ்வில் மாற்றம் என்பதே இல்லாமல் போகும்’ என்றார் முனிவர்.
சகாதேவனும், “உண்மை தான் முனிவரே! ரிஷ்ய சிருங்கரின் அபூர்வ வரலாற்றைத் தொடருங்கள்….” என்று சொல்ல லோமசர் தொடர்ந்தார்.
“லோமபாதன் சூரியவம்ச அரசனான தசரத சக்கரவர்த்திக்கு நல்ல நண்பன்”
“அப்படியானால், இந்த சம்பவம் தசரதரின் காலத்திலேயே நடந்தவையா?”
“ஆம்.. இவை அந்த நாளைய மாயா விநோதங்களே!”
“அந்த விநோதம் எப்படிப்பட்டது. ரிஷ்ய சிருங்கருக்கு பெண் தொடர்பு எப்படி ஏற்பட்டது?”
“அங்கதேசத்தில் ஒரு சமயம் மழை இல்லாமல் போனது. குடிக்க நீரின்றி உயிர்கள் வாடின”
“என்ன கொடுமை… இந்திரன் மழைக்கு அதிபதியான வருணனுக்கு கட்டளையிடவில்லையா?
“நல்ல கேள்வி… வருணன் முதலான தேவர்களுக்கு பசி என்ற ஒன்று உண்டு. இதை நீங்கள் அறிவீர்களா?”
“பசி என்பது பிணி ஆயிற்றே… எப்படி தேவர்களுக்குப் பசிக்கும்?”
“ஒன்று இயங்க வேண்டும் என்றால் அதற்கு சக்தி வேண்டும். அதில் இருவகை உண்டு. ஒன்று உடல் சார்ந்தது. இன்னொன்று உள்ளம் சார்ந்தது. தேவர்களுக்கு இருப்பது உள்ளப்பசி”
“உள்ளமாகிய மனம் இயங்கிக் கொண்டே இருப்பதால், அதற்கும் பசி உண்டு என்பது ஏற்புடையது தானே…!”
“சரியாக புரிந்து கொண்டீர்கள்…! அவர்களுக்கான உணவு தான் நாம் வேள்வியில் போடும் ஆகுதிகள்!”
“ஓ…. இந்த ஆகுதிகள் தான் அவர்களிடம் சென்று சேர்கின்றனவா?”
“ஆம்… இதற்காகவே, வேத வேள்வி தவறாது நிகழ வேண்டும். அந்தணர்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்ற கோட்பாடுகள்
உருவாயின.”
“அப்படி என்றால் அங்கதேசத்தில் அவ்வாறு நடைபெறவில்லையா?”
“சரியாக கேட்டாய். அந்தணர் கடமை தவறினாலும், யாகவேள்வி நிகழாவிட்டாலும், தான தர்மம் தடைபட்டாலும், உத்தம பெண்ணுக்கு துரோகம் நேர்ந்தாலும் முதலில் பாதிப்படைவது விண்ணுலகம் தான். இதை உணர்ந்த லோமபாதன் சதுர்வேத மங்கலம் என்னும் பகுதியை அந்தணருக்கு அளித்தான். அதன்பின்னும் வருணன் மழையைத் தர தயாரில்லை. இந்த சமயத்தில் ரிஷ்யசிருங்கரைப் பற்றி கேள்விப்பட்டான் மன்னன். அவரை அங்கதேசத்திற்கு அழைத்து வருவோருக்கு வேண்டிய அளவு பொன்னும், பொருளும் தரப்படும் என்று அறிவித்தான்.
அதைக் கேட்ட வயதான தாசி ஒருத்தி, தன் மகளான இளம் தாசியுடன் ரிஷ்ய சிருங்கரைத் தேடிச் சென்றாள்.
அவள், அவரது ஆஸ்ரமத்திற்கு சற்று தூரத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கினாள். அதில் மலர்ச்செடிகள், கொடிகள், போதை தரும் பழங்களை வளர்த்தாள். ஆடவர்கள் கண்டால் மயங்கும் விதத்தில் மகளை அழகுபடுத்தினாள். விபாண்டகர் ஆஸ்ரமத்தில் இல்லாத சமயத்தில், தன் மகளை அங்கு அனுப்பி வைத்தாள். இளம் தாசியைக் கண்ட ரிஷ்ய சிருங்கருக்கு மெல்லிய சலனமும், வியப்பும் ஏற்பட்டது. தாசியும் அவரை மயக்கும் விதத்தில் பேசத் தொடங்கினாள்.
சற்று தூரத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் வசிப்பதாக தெரிவித்த அவள், அங்கு வந்து தன்னை கவுரவப்படுத்த வேண்டும் என்று வேண்டினாள். அவரது கால்களில் விழுந்து வணங்கும் போது, அவரின் உடல் மீது படும் விதத்தில் நெருக்கமாக இருந்தாள்.
அப்போது ரிஷ்ய சிருங்கரிடம் மாயை தன் வேலையைக் காட்டத் தொடங்கியது.
– தொடரும்
ரிஷ்யசிருங்கர் அந்த பெண்ணின் அழகில் ஈடுபட்டு, புதிய சுகத்தை உணர்ந்தார். அவளும் அன்றைக்கு அவ்வளவு போதும் என்ற முடிவோடு “நான் பிறகு வருகிறேன்’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டாள்.
அவள் சென்றாலும் ரிஷ்ய சிருங்கரால் அவளை மறக்க முடியவில்லை. அவள் வரும் போது, கொண்டு வந்த பழத்தின் ருசி, சூடியிருந்த பூக்களின் மணம் என்று எல்லாமே அவருக்கு புதிதாக இருந்தது.
இந்நிலையில், ஆஸ்ரமத்திற்கு திரும்பிய விபாண்டகர் தன்னை மறந்த நிலையில் கிடந்த மகனைக் கண்டு, “என்னாயிற்று?’ என்று கேட்க, ரிஷ்ய சிருங்கர் வந்தது ஒரு பெண் என்பது கூட தெரியாமல், “தந்தையே அழகிய ஒருவன் வந்தான்…. அவனுக்கு நெடிய கூந்தல், பருத்த மார்பு, சிவந்த உதடு, மீன் போன்ற கண்கள், தின்னக் கொடுத்த பழங்கள் எப்படி தித்திப்பு தெரியுமா? எனக்கு கண்கள் செருகி விட்டன….? என்று மிக அப்பாவித்தனமாகப் பேசினார்.
விபாண்டகருக்கு புரிந்து விட்டது!
வந்து சென்றவள் ஒரு பெண்… மயக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறாள். இதை உணர்ந்த விபாண்டகர் மகனை எச்சரித்தார்.
“மகனே….நீ வேதம், வேள்வி என்று தவ வாழ்வு வாழ்பவன்…. தவசிகளையே இந்த உலகமும் மதிக்கும். தவசிகளைத் தான் இந்த உலகத்தால் ஒன்றும் செய்ய முடியாது. நீ நினைத்தால் இந்த உலகத்தையே ஆட்டி வைக்கலாம். மிக வலியவர்கள் நாம். நம் வலிமையை குன்ற வைக்க சில அசர சக்திகள் எப்போதும் முயலும். அப்படி ஒரு சக்தி தான் பெண் வடிவில் வந்து உன்னுள் சலனம் ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. நீ இனி அதற்கு இடம் தராதே. மன உறுதியோடும், கட்டுப்பாட்டோடும் இரு. அது தான் நமக்கு நல்லது,” என்று அறிவுரை கூறினார்.
ஆனால், விதியின் முன் அவர் அறிவுரை பயனற்றுப் போனது. மீண்டும் விபாண்டகர் இல்லாத சமயம் வந்தாள் அந்த இளம்தாசி. இம்முறை ரிஷ்யசிருங்கரை பலமடங்கு கவர்ந்து தன்னோடு அழைத்துக் கொண்டு போய் விட்டாள்.
அப்போது, லோமபாதன் அரண்மனையில் பெரும் புழுக்கத்தில் இருந்தான். திடும்மென்று மேகங்கள் திரண்டு மழை பொழியவும்,
ரிஷ்யசிருங்கர் அங்க தேசத்திற்குள் நுழைந்து விட்டதை தெரிந்து கொண்டான். தாசியும் ரிஷ்யசிருங்கருடன் வந்து நின்றாள்.
லோமபாதன் ரிஷ்யசிருங்கரை வணங்கினான். அப்போது தான் ரிஷ்யசிருங்கர் நாடு, மக்கள், அதில் ஆண், பெண் என்ற இனபேதம் என
சகலத்தையும் உணர்ந்தார். லோமபாதனும் அவரை அழைத்து வரப்பட்ட பாட்டைக் கூறி, அந்த வேசிகளுக்கு பொன், பொருள் கொடுத்து அனுப்பினான். ரிஷ்யசிருங்கரை தன் அரண்மனையில் தங்குமாறு வேண்டினான். தன் மகளான சாந்தை என்னும் சாந்தாவை அறிமுகம் செய்து வைத்தான். சாந்தாவும், ரிஷ்யசிருங்கர் எந்த நிலையிலும் தன் நாட்டை விட்டு போய் விடக் கூடாது என்று விரும்பினாள்.
அதற்காக மிகப் பணிவுடன் உபசரித்தாள்.
“பெருமானே! உம்முடைய தனித்தன்மையால் தான் இந்த நாட்டில் மழை பொழிகிறது. இனி இந்த தேசம் பசி, தாகம் இல்லாத தேசமாகி விடும். எல்லாம் உமது மகிமையால் தான் நடக்கிறது. நீங்கள் வனத்தில் இருந்து வேள்வி செய்து அடையும் பயனை விட, ஒரு நாட்டு மக்களை வாழ்விக்கச் செய்து அடையும் பயன் பெரியது என்பதை உணருங்கள்,” என்றாள்.
சாந்தாவின் பேச்சு ரிஷ்யசிருங்கரை கட்டிப் போட்டு விட்டது. பின் அது காதலாகவும் ஆகியது.
வனத்திலோ விபாண்டகர் ஆஸ்ரமத்தில் மகனைக் காணாது துடித்தார். ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து அங்கதேசம் நோக்கி நடந்தார்.
விபாண்டகர் கோபத்துடன் வந்தால் அங்கதேசம் என்ன கதியாகும் என்று லோமபாதனும் உணர்ந்திருந்தான். எனவே, அவர் அரண்மனை நோக்கி வரும் போது உழவர்கள், பிராமணர்களை வரிசையாக நிறுத்தி வணங்கச் செய்தான். விபாண்டகரும் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தார். கோபம் தணிந்தவராக அரண்மனைக்குள் நுழைந்தார்.
லோமபாதன் அவரை வணங்கினான்.
ரிஷ்யசிருங்கரை அரண்மனைக்கு அழைத்த காரணத்தைக் கூறினான். விபாண்டகரும் லோமபாதனுக்கு ஆசி வழங்கினார். அதன்பின்
சாந்தாவை ரிஷ்யசிருங்கருக்கு மணம் செய்வித்தார்.
எப்படி சந்திரனுக்கு ரோகிணியும், வசிஷ்டருக்கு அருந்ததியும், அகத்தியருக்கு லோபமுத்திரையும், முத்கலருக்கு நளாயினியும், ராமனுக்கு சீதையும் பொருத்தமாக அமைந்தார்களோ, அப்படி ரிஷ்யசிருங்கருக்கு சாந்தா இருந்தாள்,” என்று முடித்தார் லோமசர்.
வனவாசம் செய்த பாண்டவர்களுக்கு, நடப்பதை எல்லாம் பார்க்கும் போது, தண்டனைக்குரிய காலத்தில் வாழ்வதாக அவர்களுக்கு தோன்றவில்லை.
ஒருவேளை காண்டவ பிரஸ்தத்தில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடியிருக்க முடியுமா? அகத்தியர், ரிஷ்ய சிருங்கர், பரசுராமர், ததீசி முனிவர் போன்றோரை எல்லாம் தெரிந்து கொண்டிருக்க முடியுமா?
“இன்னும் பலரைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம்,” என்று தர்மன் தெரிவித்தான்.
கங்கையின் ஒரு பாகமாக ஓடும் வைதரிணி நதியை அவர்கள் அடைந்தனர்.
“இங்கும் நீங்கள் தெரிந்து கொள்ள பல வரலாறுகள் உள்ளன” என்றார் லோமசர்.
“யாருடையது” என்றான் சகாதேவன்.
“ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீர்யார்ஜூனின் வரலாறு. இவனைப் பற்றிச் சிந்திக்கும் போது, ரிஷீகர், காதி, சத்யவதி, ஜமதக்னி போன்றோரையும் நாம் மறக்க முடியாது,” என்றார் லோமசர்.
-தொடரும்
கார்த்த வீர்யார்ஜுனன் பற்றிச் சொல்லத் தொடங்கினார் லோமசர்.
“பாண்டவர்களே! தவ வாழ்வில் ஈடுபட்ட நான் கற்றுணர்ந்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து வருகிறேன். அந்த வகையில் இப்போது சொல்லப் போகும் கார்த்த வீர்யார்ஜுனன் வரலாறு வினோதமானது. மிக கவனமாக கேளுங்கள்,” என்றார்.
சூரிய வம்சத்தினர் ஆட்சி செய்யும் நாடு கேகயம். இதை சமஸ்கிருதத்தில் “ஹேஹயம்’ என்பர். இதன் மன்னனாகத் திகழ்ந்தவன் கிருதவீர்யன். இவனது மனைவி சுனந்தை. இவர்களுக்கு புத்திரப் பேறு வாய்க்கவில்லை.
இறைநம்பிக்கை இல்லாமல், ஆன்மிக நெறிகளைப் பின்பற்றாமல், மனித உடலுக்குள் இருக்கும் ஆற்றலைப் பெரிதாக எண்ணி வாழ்ந்து மடிந்தவர்கள் அனைவரும், தங்கள் தலைமுறைக்கு புத்திரதோஷத்தை விட்டுச் செல்கின்றனர். பூவுலகில் வாழும் வரை உடல் சக்தியை நம்பியும், அதைப் பேணியும் வாழ்ந்தவர்கள், இறப்புக்கு பின் சூட்சும உடம்போடு திரியும் போது தான், வாழ்வின் மறுபக்கம் எப்படிப்பட்டது என்பதை உணர்கின்றனர்.
ஆனால், அதனால் ஒரு பயனுமில்லையே!
இவர்கள் சூட்சும உடம்போடு புண்ணிய பலன் என்று ஒன்றும் இல்லாததால் மண்ணுலகைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இவர்கள் இப்படி தவிப்பதே, இவர்களது தலைமுறையில் புத்திர தோஷமாக எதிரொலிக்கிறது…” – என்ற லோமசரை சகாதேவன் இடைமறித்தான்.
“லோமசரே! நீங்கள் கூறுவது புதிராக உள்ளது. தன்வசம் உள்ள சக்தியைப் பெரிதாகக் கருதி வாழ்வது எப்படி தவறாகும்? உலக உயிர்கள் எல்லாம் அப்படித் தானே வாழ்ந்து மடிகின்றன. அவை எல்லாம் தோஷத்திற்கு ஆளானால், ஒரு உயிர் கூட உலகில் இருக்க வாய்ப்பில்லையே….?” என்றான்.
“சகாதேவா…. உன் கேள்வி மேம்போக்கானது. சிந்தித்துப் பேசு. அதற்கே உனக்கு ஆறாவது அறிவு வழங்கப்பட்டுள்ளது. ஆறாவது அறிவு இல்லாத உயிர்களுக்கு தோஷம் என்ற ஒன்றே கிடையாது. பாவ, புண்ணியமும் அவற்றுக்கு இல்லை. ஆறாம் அறிவுள்ள மனிதர்களுக்கு பகுத்துப் பார்க்கும் திறன் இருப்பதால், அவர்களுக்கே இது பொருந்தும்.”
“அப்படி என்றால், மனிதன் தன் சக்தியால் செய்யும் செயல்களால் தான் அனைத்தும் ஏற்படுகின்றதா?”
“ஆம்…. அப்படித் தான் கிருதவீர்யனுக்கு புத்திர தோஷம் ஏற்பட்டது. தோஷத்துக்கு மருந்து தவம் தான். கிருதவீர்யன் புத்திரபேறுக்காக தவமிருந்தான். அதன் பயனாக புத்திரன் பிறந்தான். ஆனால் பாவம்…..” என்று லோமசர் சொல்லும் போதே, ஏதோ சிக்கல் என்பது பாண்டவர்களுக்குப் புரிந்து விட்டது.
“அந்தக் குழந்தை.. கை கால் இன்றி வெறும் சதைப் பிண்டமாக பிறந்தது.
“இப்படி ஒரு பிள்ளைக்காகவா தவமிருந்தேன்…? இது என்ன கொடுமை’ என்று மனம் வருந்திய கிருதவீர்யன்- சுனந்தை இருவரும், குழந்தையோடு தற்கொலை செய்ய முயன்றனர்.
அப்போது தர்மதேவதை அசரீரியாகத் தோன்றி, “கிருதவீர்யா… அவசரப்படாதே. இது முற்பிறவி கர்மவினையின் விளைவு… இந்த பிள்ளை ஆயிரம் கைகள், கால்களைப் பெற வாய்ப்பு இருக்கிறது. தத்தாத்ரேயர் என்னும் பரம்பொருளின் அருளால், இவன் மேன்மை அடைவான். வருந்தாதே…!” என்று தடுத்தது.
கிருதவீர்யன் அமைதி அடைந்தான். அவன் உயிரோடு வாழ்ந்தவரை கார்த்தவீர்யன் ஊனமாகத்தான் இருந்தான். அவன் மறையவும் வாரிசு என்ற முறையில் கார்த்தவீர்யனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடானது.
ஆனால், பட்டமேற்க அவன் சம்மதிக்கவில்லை. “எனக்கு அரச பதவி வேண்டாம். நான் பெரும் பாவி. அரசனாகி மேலும் பாவியாக விரும்பவில்லை” என்றான்.
இந்த நிலையில் கர்க்கர் என்னும் முனிவர், “”எல்லா மக்களும் பாவம் செய்ய வழி இல்லாதபடி செய்து விட்டால், அச்சப்படவே தேவையில்லை….எனவே, அதற்கான வரத்தைப் பெற வனத்தில் வாழும் தத்தாத்ரேயரை நாடிச் செல்,” என்று வழி காட்டினார்.
“முனிவரே… எல்லாரையும் பாவம் செய்யாதபடி வழிநடத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதா?” என்று எதிர் வினா எழுப்பினான்.
“கார்த்தவீர்யனே! அப்படி நினைக்காதே! அனைத்துக்கும் அடிப்படையான ஒரு விஷயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதில் தான் வாழ்வின் சிறப்பு உள்ளது” என்றார் கர்க்கர்.
“அப்படி என்ன விஷயம்?” என்று கேட்டான் கார்த்தவீர்யன்.
அவனிடம் கர்க்கர்,””முதலில் தத்தாத்ரேயர் பற்றி தெரிந்து கொள். அத்திரி மகரிஷிக்கும், அனுசூயாவுக்கும் பிறந்தவர் இவர். விஷ்ணுவே தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று விரும்பி தவமிருந்த அத்திரி மகரிஷிக்கு, அவர் தம்மையே தத்தம் செய்து கொடுத்ததால் “தத்தாத்ரேயர்’ என்று பெயர் பெற்றார். விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதயமானவர் பிரம்மா. சூரியனும், சந்திரனும் அவரின் இருவிழிகள். அவரின் ஆன்மாவாக இருப்பவர் ருத்ரர். எனவே, மும்மூர்த்திகளின் மானிட அம்சம் தான் இந்த தத்தாத்ரேயர். இவர் ரிஷிகளில் எல்லாம் மேலான ரிஷி. புத்திரர்களில் மேலான புத்திரர். ஞானியரில் நிகரில்லாத ஞானி. இப்படி.. அவரைப் பற்றிச்
சொல்லிக் கொண்டே போகலாம். உனது குறைகளைப் போக்கி மேலான மனிதனாக ஆக்க தத்தாத்ரேயரால் மட்டுமே முடியும்.
நீ அவரை உன் குருவாக, இஷ்ட தெய்வமாக மனதில் ஏற்றுக் கொள். பிறகு பார்,” என்றார்.
“தேவர்களுக்கே வழிகாட்டியாக விளங்கியவர் தத்தாத்ரேயர்,” என்ற கர்க்க முனிவர், அதற்கு சாட்சியாக சம்பவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார்.
– தொடரும்
ஒரு முறை தேவ அசுர யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். பயந்து போன தேவர் தலைவன் இந்திரன், தங்கள் குருவான வியாழ பகவானிடம், அவர்களை ஒடுக்குவது குறித்து ஆலோசனை கேட்டான்.
தேவகுரு தன் ஞானசக்தியால் தத்தாத்ரேயர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து வைத்திருந்தார். விஷ்ணுவின் அம்சமான தத்தாத்ரேயரிடம் இந்திரனைச் சரணடையச் சொன்னார். ஆனால், இந்திரன் தத்தாத்ரேயரை ஒரு ரிஷிபுத்திரனாக மட்டுமே பார்த்தான்.
அவனிடம் வியாழ பகவான், “இந்திரா! உனக்கு முக்காலத்தையும் உணரும் ஞானம் இல்லை. தேவர்களின் தலைவன் என்ற கர்வம் உன்னை மழுங்கச் செய்து விட்டது. தத்தாத்ரேயர் ஒருவரால் மட்டுமே உனக்கு உதவ முடியும். தயங்காமல் புறப்படு,” என்றார்.
குருவின் பேச்சை ஏற்ற இந்திரன் தத்தாத்ரேயரின் ஆஸ்ரமத்தை அடைந்தான். கையில் மதுக்கிண்ணத்துடன் இருந்த தத்தாத்ரேயர், ஒரு பெண்ணைக் கொஞ்சியபடி இருந்தார். திடுக்கிட்ட இந்திரன், குருவிடம் திரும்பி வந்து, தான் பார்த்ததைக் கூறினான். தத்தாத்ரேயரின் மாயா விளையாட்டு தான் இது என்பதை குரு விளக்கத் தொடங்கினார்.
“இந்திரா! தத்தாத்ரேயரை எவ்வளவோ ரிஷி புத்திரர்கள் அண்டியிருந்தனர். குருகுல வாசம் முடிந்த பின்னரும் அவரை பிரியாமல் இருந்தனர். அவர்கள் தத்தாத்ரேயரின் ஆஸ்ரமத்தை வைகுண்டம் போல் கருதியதே இதற்கு காரணம். எனவே, அவர்களை அவர்களின் ஊருக்கு அனுப்ப, ஒரு உபாயத்தைக் கையாண்டார். லட்சுமியின் மாயா சக்தியை ஒரு பெண் வடிவமாக்கி ஆஸ்ரமத்தில் இருக்கச் செய்தார். இதைக் கண்ட ரிஷிபுத்திரர்கள் மனம் வெறுத்து, அவரை விட்டுச் சென்று விட்டனர். நீயும் அந்த நாடகத்தைப் பார்த்து ஏமாந்து வந்து விட்டாய்,” என்றார்.
இந்திரன் குருவிடம்,”” இப்படி ஏன் அவர் தன்னை தாழ்த்திக் கொள்ள வேண்டும். அவர் நினைத்தால் அவரவர் மனதிற்குள் புகுந்து மாயையை தெளிவிக்க முடியாதா?” என்று கேட்டான்.
“இந்திரா… சகலமும் படைத்த அவருக்கு உயர்வு, தாழ்வு என்பதெல்லாம் ஏது?”
“குருவே… இது என்ன பதில்… பரந்தாமனை ஒரு பெண் பித்தராகக் காண சகிக்குமா?”
“இந்திரா…. விஷ்ணு ஆதியந்தம் இல்லாதவர். தேவர்கள் மட்டுமல்ல, அசுரர்களும் அவரின் படைப்பே. நிர்குண பிரம்மமான அவருக்கு குணமே கிடையாது. மனம் உயரிய நிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற மாயத்திரையை கிழித்து ஊடுருவிப் பார்க்க முடியும். சராசரி மனப்பான்மை இருந்தால் மாயைக்கு இரையாகி விடுவோம்,” என்று விளக்கம் கொடுத்தார்.
இந்திரனும் தெளிந்த மனதுடன் தத்தாத்ரேயரிடம் சரணடைந்தான்.
தத்தாத்ரேயர், “இந்திரா! என் மீது நம்பிக்கை வைத்து தைரியமாகப் போரிடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்றார்.
மீண்டும் போர் தொடங்கியது. அசுரக்கூட்டம் இந்திரனைத் துரத்தியது. பயத்துடன் இந்திரன், தத்தாத்ரேயர் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான்.
அசுரர்களும் பின் தொடர்ந்தனர்.
ஆஸ்ரமத்தில் இருந்த பெண் அசுரர்களைப் பார்த்துச் சிரித்தாள். அசுரர்கள் அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தனர். ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, அந்தப் பெண்ணை நெருங்க முற்பட்டனர். யார் அவளை அடைவது என்ற போட்டி அவர்களுக்குள் ஏற்பட்டது.
பலசாலியான ஒரு அசுரன், அந்த பெண்ணைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடினான்.
மற்றவர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.
தத்தாத்ரேயர் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
அதிர்ச்சியுடன் இந்திரன்,””மகரிஷி… அசுரர்களின் அடாத செயலைப் பார்த்தீர்களா?” என்றான்.
தத்தாத்ரேயர் பலமாகச் சிரித்தார்.
“இந்திரா…. போரிட வந்தவர்கள் போரிடாமல் போனதை வெற்றி என்று கருதுகிறாயே…. கவலைப்படாதே. அவர்கள் தூக்கிச் சென்றது லட்சுமியின் மாயா அம்சத்தையே! பாற்கடலில் பிறந்த மகாலட்சுமியின் திருவடிகளைச் சரணடைந்தால் மோட்ச சாம்ராஜ்யத்தையே
தந்தருள்வாள். அதை விட்டு எவரொருவர் அவளைத் தலைக்கு மேல் தூக்குகிறார்களோ, அவர்களிடம் ஒரு வினாடி கூட இருக்க
மாட்டாள். அசுரர்கள் தூக்கிச் சென்றதைப் பார்த்தாய் அல்லவா?” என்று தத்தாத்ரேயர் கேட்க இந்திரனுக்கு விஷயம் புரிந்தது.
“மகரிஷி…அன்னை மகாலட்சுமி அசுரர்களை விட்டு செல்வதற்கும், போரில் வெற்றி பெறுவதற்கும் என்ன சம்பந்தம் என்று
விளக்குங்கள்?” என்றான்.
“இந்திரா…லட்சுமி உள்ள இடத்தில் தான் வெற்றி குவியும். அவள் நீங்கி விட்டால் வெற்றி பறிபோய் விடும்,” என்றார்.
இந்திரனும் போரிட்டு வெற்றி பெற்றான்.
இவ்வாறு, தத்தாத்ரேயர் எப்படிப்பட்டவர் என்பதை கர்க்க முனிவர் விளக்கி முடித்தார்.
இதைக் கேட்ட கார்த்தவீர்யன் இந்திரனைப் போலவே தெளிவு பெற்றவனாய், தத்தாத்ரேயரைத் தேடிச் சென்றான்.
அவரது காலில் விழுந்து சேவை செய்தான்.
கைகள் இல்லாத அவனது சேவையை ஏற்று மகிழ்ந்த தத்தாத்ரேயர், “உன் தேவை என்ன?” என்று கேட்டார்.
“மகரிஷி… என் நாட்டு மக்களின் பாவம் என்னைச் சேரக் கூடாது. நானும் உடல்குறை நீங்கி முழுமனிதனாக வாழ வேண்டும்,” என்று வேண்டினான்.
“ஒன்றல்ல… இரண்டல்ல…. ஆயிரம் கைகள் தருகிறேன். உன் தேச மக்கள் தவறு செய்ய எண்ணும் போது, உன் ஆயிரம் கைகளில் ஒன்று அவர்களின் மனக்கண்ணில் தோன்றி அவர்களைத் தடுக்கும். அது மட்டுமல்ல…. எவ்வளவு பெரிய எதிரியையும் வெற்றி
கொள்ளும் மாவீரனாகத் திகழ்வாய்,” என்று வரம் கொடுத்தார்.
கார்த்தவீர்யார்ஜுனன் என்னும் மாவீரன் இப்படித் தான் உருவானான்.
– தொடரும்
ஜமதக்னி முனிவரிடம் வரம் பெற்ற பரசுராமருக்கு, கார்த்தவீர்யார்ஜுனனுடன் மோதல் ஆரம்பித்தது. அதன் பின்னணியில் மோசமான சம்பவம் ஒன்று இருந்தது.
வனத்தில் ஜமதக்னி முனிவர் தன் புத்திரன் பரசுராமர், மனைவி ரேணுகா ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். விதி கார்த்தவீர்யாஜுனன் வடிவில் அங்கு வந்தது. படையுடன் வேட்டைக்கு வந்த கார்த்தவீர்யார்ஜுனன் பசியோடு ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்திற்குள் நுழைந்தான். முனிவர் அப்போது தியானத்தில் இருந்தார். கார்த்தவீர்யார்ஜுனன் தன் தளபதியிடம், முனிவரின் தியானத்தைக் கலைக்கச் சொன்னான்.
தளபதியும் அவரது தோளைக் குலுக்கி, “ஏய்…. முனிவா…. யார் வந்திருக்கிறார்கள் என்று கண்ணைத் திறந்து பார்,” என்றான்.
ஜமதக்னி கண் திறக்கவில்லை. அப்போது பரசுராமனும் அங்கு இல்லை. ரேணுகா ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்தாள். ஆஸ்ரமமே அமைதியாக இருந்தது. இந்நிலையில் ஆஸ்ரம வாசலில் கட்டப்பட்டிருந்த ஹோமப்பசு, கன்றுக்கு பால் கொடுத்த படி “அம்மா’ என்று கத்தியது. அந்தக் குரல் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு நாராசமாக காதில் ஒலித்தது. ஒருபுறம் ஜமதக்னியின் கலையாத தியானம்,
மறுபுறம் பசுவின் தீனக்குரல் இரண்டும் ஆவேசத்தை உண்டாக்கியது. ஆஸ்ரமத்தை அடித்து நொறுக்க உத்தரவிட்டான்.
படை வீரர்களும் அப்படியே செய்தனர். கார்த்தவீர்யார்ஜுனன் கன்றுக்குட்டியைப் பசுவிடமிருந்து பிரித்து இழுத்துச் சென்றான். கன்றைப் பிரிந்ததால் பசு கதறியது. கோபம் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன் பசுவை வாளால் இரு துண்டாக வெட்டினான். தொழுவத்திற்கும் தீயிட்டு நகர்ந்தான்.
சற்று நேரத்தில் ஜமதக்னி முனிவர் தியானம் கலைந்து எழுந்தார். அவரால் நடந்ததை உணர முடிந்தது. அப்போது பரசுராமரும் அங்கு வந்து சேர்ந்தார். நடந்ததைக் காண அவருக்கு சகிக்கவில்லை. குறிப்பாக ஹோமப்பசு இரு துண்டாகக் கிடப்பதும், தொழுவம்
தீக்கிரையாக்கப்பட்டதும், அவரை கோபத்தின் உச்சத்திற்கு இழுத்துச் சென்றது. ஆவேசமுடன் கார்த்தவீர்யார்ஜுனனை நோக்கிப் புறப்பட்டார். முனிவரும் மகனைத் தடுக்கவில்லை.
கார்த்தவீர்யார்ஜுனனும் பரசுராமரை எதிர்த்து நின்றான். பசுவைக் கொன்ற பாவம் அவனது வலிமையைக் குறைத்து விட, அவனது ஆயிரம் கரங்களைப் பரசுராமர் கோடரியால் வெட்டினார். பிறந்த நேரத்தில் இருந்தது போல, காலும் கையும் இல்லாதவனான கார்த்தவீர்யார்ஜுனன் பரசுராமரின் கோடரிக்கு இரையானான்.
இவ்வாறு, லோமச முனிவர் கார்த்தவீர்யார்ஜுனன் கதையைச் சொல்லி விட்டு நிறுத்தினார். பாண்டவர்களின் முகத்தில் பலமான சிந்தனை எழுந்தது.
“உங்களுக்கு என்ன சிந்தனை?” என்று கேட்டார் லோமசர்.
“அற்புத வளர்ச்சி கண்ட கார்த்தவீர்யார்ஜுனன், இப்படியா ஒரு ரிஷி புத்திரனால் வதம் செய்யப்படுவான். விதியின் போக்கை நினைத்தேன். ஒன்றும் பேசத் தோன்றவில்லை” என்றான் தருமன்.
“நாச காலம் வந்து விட்டால் புத்தியும் விபரீதமாகி விடும் என்ற உண்மை புரிகிறது” என்று பெருமூச்சு விட்டான் நகுலன்.
“கார்த்தவீர்யார்ஜுனனின் முடிவு எனக்கு ஒரு விஷயத்தை உணர்த்துகிறது. எத்தனை கைகள் ஒருவருக்கு இருந்தாலும் அதில் பெருமை இல்லை. அதை நன்மைக்குப் பயன்படுத்தாவிட்டால், அவை வெட்டி வீழ்த்தப்படும் என்பது புலனாகிறது,” என்றான் சகாதேவன்.
“மகரிஷியே… இனி தான் பெரும் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன என்று சொன்னீர்களே…. அவை என்ன?” – என்று விஷயத்தின் மையத்தை தொட்டாள் திரவுபதி.
லோமசரும் சிரித்தபடி சொல்லத் தொடங்கினார்.
“திரவுபதி… நன்றாகத் தெரிந்து கொள். வாளெடுத்தவனுக்கு வாளால் தான் முடிவு உண்டாகும். யுத்தம் என்று வந்து விட்டால் இரு பக்கமும் இழப்பு ஏற்படவே செய்யும். கார்த்தவீர்யார்ஜுனன் கொல்லப்பட்ட பிறகு அவனது புத்திரர்கள் ஒன்று கூடி, தந்தையைக் கொன்ற பரசுராமன் உயிரோடு இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தனர். பரசுராமர் இல்லாத நேரத்தில் ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். முனிவர் மீது பாணம் போட்டு கொலை செய்ததோடு, ஆஸ்ரமத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். அங்கிருந்த ரேணுகாதேவியும் எரிந்து சாம்பலானாள். பெற்றோரைக் கொலை செய்ததைக் கண்ட பரசுராமர், பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் புறப்பட்டார். கார்த்தவீர்யார்ஜுனனின் பிள்ளைகள் அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகும் கோபம் தீரவில்லை. ஷத்திரிய வீரன் ஒருவனைக் கூட உயிரோடு இருக்க விடவில்லை. 21 தலைமுறையினரையும் வெட்டிச் சாய்த்தார். பிருகு வம்சம் உலகில் நிகரில்லாதது என்பதையும் நிரூபித்துக் காட்டினார்,” என்று லோமசர் கூறி முடித்திட பாண்டவர்கள் பரசுராமரின் வீரத்தை அறிந்து கொண்டனர்.
அங்கிருந்த பரசு தீர்த்தத்தில் நீராடிய பாண்டவர்கள் பரசுராமரைத் தியானித்தனர்.
அவர்களுக்கு பரசுராமர் காட்சியளித்து ஆசியளித்தார். அதன்பின் மகேந்திர பர்வதத்தை அடைந்த பாண்டவர்கள், இரவு நேரத்தை அங்கு கழித்தனர். பின் தெற்கு நோக்கிப் பயணம் புறப்பட்டனர். வழியில் பயோஷினி என்னும் நதி குறுக்கிட்டது.
அந்நதியைப் பார்த்த லோமசருக்கு, கயன் என்பவன் அங்கு இந்திர வேள்வி புரிந்தது நினைவுக்கு வந்தது. அப்படியே மகா தபஸ்வியான சியவன மகரிஷியின் நினைவும் உண்டானது.
– தொடரும்